Published : 23 Sep 2022 09:31 AM
Last Updated : 23 Sep 2022 09:31 AM

பன்றிக்காய்ச்சல் பாதிப்பின் அறிகுறிகள், சிகிச்சைகள்: சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தின் பல பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். இதேபோல,கோவையிலும் சிலர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள், பாதிப்பை உறுதிப்படுத்தும் சோதனை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தால், அது சாதாரண காய்ச்சலாக இருக்கலாம் அல்லது வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம். மக்களால் அதை கண்டறிய முடியாது.

ஆரம்ப நிலையில் மருத்துவர்கள் கண்டறியஉதவும் வகையில், பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளை ஏ,பி,சி என மூன்று வகையாக பிரித்துள்ளோம்.

லேசானகாய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி இருந்தால் அதை ஏ எனவும், தொடர்ந்து அதிக காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் அதை பி எனவும், காலையில் லேசான காய்ச்சல் இருந்து, மாலையில் திடீரென காய்ச்சல் அதிகமாவது, மூச்சுத் திணறுவது, கடுமையான சோர்வு ஆகிய அறிகுறிகள் இருந்தால் அதை சி எனவும் பிரித்துள்ளோம்.

இதில், ஏ,பி வகை பாதிப்புஉள்ளவர்கள் பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை. பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ‘டாமி ஃபுளூ’ மாத்திரைகளை முன்கூட்டியே அளித்தால்தான் பலனளிக்கும். எனவே, பாதிப்பு இருக்கிறது என சந்தேகப்படும் நபர்கள் பி பிரிவில் உள்ளபோதே, அவர்களுக்கு ‘டாமி ஃபுளூ’ மாத்திரைகளை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

மாத்திரை அளிக்க தாமதிக்கும்போது அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரே நாளில் முடிவு: சி பிரிவில் இருப்பவர்களுக்கு ‘ஸ்வாப்’ பரிசோதனை மூலம் பன்றிக்காய்ச்சலை உறுதிப்படுத்த முடியும். இந்த பரிசோதனை, எச்1என்1 ஆர்டி-பிசிஆர் முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

பரிசோதனைக்காக தொண்டை பகுதியில் இருந்து சளி மாதிரி எடுக்கப்படும். மூக்கு வழியாகவும் மாதிரி எடுக்கலாம். காலையில் பரிசோதனை மேற்கொண்டால் பெரும்பாலும் மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும். மாலை பரிசோதனை மேற்கொண்டால் மறுநாள் முடிவு கிடைத்துவிடும்.

சளி மாதிரி எடுத்த பின்னர், உடனே ‘டாமி ஃப்ளூ’ மாத்திரை உட்கொள்ள வேண்டும். சோதனை முடிவில் பன்றிக்காய்ச்சல் இல்லை அல்லது இருக்கிறது என்று எப்படி முடிவு வந்தாலும், மாத்திரைகளை தொடர்ந்து 5 நாட்களுக்கு கட்டாயம் சாப்பிட வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கூடுதலாக 5 நாட்கள் மாத்திரை சாப்பிட வேண்டும்.

இதேபோல, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ‘டாமி ஃபுளூ’ மாத்திரைகளை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். சி பிரிவில் உள்ளவர்களை கட்டாயம் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

முழுமையாக குணமடையும் வரை அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அரசு சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் ‘ஸ்வாப்’ பரிசோதனை ஆய்வகம் உள்ளது.

இங்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. இதுபோக, அரசு அங்கீகரித்து அனுமதி வழங்கியுள்ள தனியார் ஆய்வுக்கூடங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்கள் தவிர, மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் மற்றவர்கள் இந்த பரிசோதனை மேற்கொள்வது தேவையற்றது.

தடுக்கும் வழிமுறைகள்: கரோனா பரவலை தடுக்க பின்பற்றப்பட்ட வழிமுறைகளைப் போன்றே முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் ஆகியவை பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.

பன்றிக்காய்ச்சல் குறித்த சந்தேகங்கள், கூடுதல் விவரங்கள், புகார்கள் ஏதும் இருப்பின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x