Published : 03 Aug 2022 08:12 PM
Last Updated : 03 Aug 2022 08:12 PM

15 ஆண்டுகளுக்குப் பிறகு கூட முளைக்கும் சீமை கருவேல மர விதைகள்: கட்டுப்படுத்துவது எப்படி?

2022 பிப்ரவரியில் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் ஓர் ஆணையை தமிழக அரசுக்குப் பிறப்பித்தது. இதன்மூலம் சீமைக் கருவேல மரங்களை அழிப்பதில் நமக்கு உள்ள தார்மிகப் பொறுப்பை உயர் நீதிமன்ற ஆணைகளின் மூலம் அறியலாம். இது தொடர்பான வேலைகளை அரசும் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

ஆனால், சீமைக் கருவேல மர அழிப்பு தொடங்குவதற்கு முன்பு, அம்மரம் தொடர்பான பல தரப்பட்ட தகவல்களை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் மிகப்பெரிய சிக்கலை நாம் சந்திக்க நேரிடும்.

சீமைக் கருவேல பாதிப்புகள்: இந்த மரங்கள் வெகு விரைவாக அடுத்தடுத்த நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து வளரும் தன்மை கொண்டவை. பரவும் இடங்களின் நீர் வளத்தையும், மண் வளத்தையும் இது தீவிரமாக பாதிக்கும். நில வளம் பெரிய மாற்றத்தை சந்திக்கும். இதன் காரணமாக, இயல் தாவரங்கள் அந்தப் பகுதிகளில் வளர முடியாமல் போய்விடும்.

விவசாயி, ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மரங்களை வெட்டி விற்பதன் மூலம் ரூ.38 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரை பணம் பெறுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, கருவேல மரங்களை அழிக்கும் வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் போது, இதுபோன்று கிடைத்துவரும் பொருளாதாரப் பலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

பரவலைக் கட்டுப்படுத்தும் முறைகள்: முன்பே குறிப்பிட்டது போல், அயல் தாவர/விலங்கு இனங்களை அவ்வளவு எளிதில் அழித்து, ஒழித்து விட முடியாது. பல வருட திட்டமிடல், தொடர் முயற்சி, மிகப்பெரிய பணபலம், ஆள்பலம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பலர் நினைப்பது போல மரங்களை வேரடி மண்ணோடு பிடுங்கி எடுத்துவிட்டால், இந்த இனம் அழிந்துவிடும் என்று தப்புக் கணக்கு போடப்படுகிறது.

ஆனால், அவர்கள் சிந்திக்காத ஓர் விஷயம் விதை வங்கி (Seed Bank), இம்மரத்தின் பண்புகளில் ஒன்று. அதாவது, மண்ணில் புதைந்துள்ள இந்த மரத்தின் விதைகள் (Deposited seeds), மறைந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்தாகத் திகழ்கிறது. ஏனெனில் இவ்விதைகள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கூட முளைத்து வளரும் மரபியல் வளத்தைக் கொண்டவை.

நன்கு வளர்ந்த ஒரு மரம் பட்டாணி போல் மிக நீண்ட காய்களைக் காய்க்கும். ஒரு காயில் 10 முதல் 25 விதைகள் இருக்கும். அதாவது, 1 கிலோ முற்றிய காயில் 4,000 முதல் 12 ஆயிரம் விதைகள் வரை இருக்கும். ஒரு வருடத்தில் ஒரு மரம் கிட்டத்தட்ட 35 - 75 கிலோ வரை காய்களை உற்பத்தி செய்யும். சற்றேறக்குறைய 1,40,000 விதைகளை ஒரு வளர்ந்த மரம் ஒரு வருடத்துக்கு உற்பத்தி செய்யும்.

அப்படியெனில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு விதைகளை இந்த மரங்கள் உற்பத்தி செய்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த விதைகள் 10 - 15 ஆண்டுகள் உயிர்ப்புடன் இருக்கும். எனவே, மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவதால், இந்த இனம் அழிக்கப்பட்டு விட்டதாக எண்ணுவது ஆபத்தாக முடிந்துவிடும்.

மேலும், வெட்டப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் முளைக்கும் செடி/மரம் அதிவேகமாக வளர்வதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இது போக, சீமைக் கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்ட இடங்களில் வேறு அயல் தாவரங்கள் விரைவாக வளர்வதைக் காணலாம்.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு, சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் வரைவு அறிக்கையை தயார் செய்ய வேண்டும். இல்லையேல், இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் கடுமையான பாதிப்பையும், பொருளாதார விரயத்தையும் ஏற்படுத்தும்.

வனத்துறையை போல அயல் தாவர - விலங்குகளை அழிக்க/கட்டுப்படுத்த ஒரு புதிய துறை தனியாக இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். இல்லை என்றால், நம்மை அறியாமல் இயற்கை வளங்களையும் நம் நாட்டுக் காட்டுயிரினங்களையும் இழக்க நேரிடும். உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் இதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

> இது, அயல் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர் ச.சாண்டில்யன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x