Last Updated : 24 Jun, 2022 07:43 PM

 

Published : 24 Jun 2022 07:43 PM
Last Updated : 24 Jun 2022 07:43 PM

மீட்டருக்கு மேட்டரா, மேட்டருக்கு மீட்டரா?

கவியரசு கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் இருவரின் பிறந்த நாளும் ஜூன் 24தான். கவியரசு கண்ணதாசன் பாட்டுச் சுரங்கம் என்றால் எம்.எஸ்.வி. மெட்டுச் சுரங்கம். இருவரின் ஒருங்கிணைப்பில் ஏராளமான பாடல்கள் நம் நினைவுகளில் நீங்காமல் இடம்பிடித்திருக்கின்றன.


அத்யந்த நண்பர்களாகத் தமிழ்த் திரையுலகில் கொண்டாடப்படும் கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விக்கும் இடையே முதலில் ஏற்பட்டது கருத்து மோதல்தான் என்றால் பலருக்கும் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கும்.


`கன்னியின் காதலி' படத்தில் `கலங்காதிரு மனமே' என்னும் பாடல்தான் கண்ணதாசனின் முதல் பாடல். இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன். இந்தப் பாடலைப் பொறுத்தவரை எழுதப்பட்ட பாடலுக்கு சுப்பராமன் இசையமைத்தார். இதே படத்தில் மெட்டுக்கு ஒரு பாடலை எழுத வேண்டியிருந்தது. சுப்பராமன் மெட்டை அமைத்துவிட்டார். சுப்பராமனிடம் உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன்தான் அந்த மெட்டை ஹார்மோனியத்தில் வாசித்துக் காண்பித்து கவிஞரிடமிருந்து பாடலைப் பெறவேண்டும். பாடலாசிரியர் கண்ணதாசன். மூன்று நாள்களில் பலமுறை மெட்டை ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்டினார் எம்.எஸ்.வி., கவிஞரிடமிருந்து நான்காம் நாள்தான் பல்லவி கிடைத்தது. அந்தப் பல்லவியின் வரிகள், "காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டு கூத்தாடுதே..."


பல்லவியின் வரிகள் மெட்டுக்குச் சரியாக இருந்தன. ஆனால் "களி, கூத்தாடுதே போன்ற வரிகள் அவ்வளவு நன்றாக இல்லை.. அதனால் அவற்றை மாற்ற வேண்டும்" என்று கண்ணதாசனிடம் கூறினார் எம்.எஸ்.வி.
கண்ணதாசன் கோபத்தில் இந்தப் பொடியன் நம் பாட்டில் குறை காண்பதா என்றிருக்க, நேரம் ஆகிக் கொண்டே போனது. அன்றைக்கு அந்தப் படக் கம்பெனியில் ஆஸ்தான கவியாக இருந்த உடுமலை நாராயண கவி, "காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதேன்னு" போட்டுப்பார் சரியாக வரும் என்றார்.

எம்.எஸ்.வி. சரியாக வருகிறது என்று நிம்மதியானார்.

கண்ணதாசனிடம், உடுமலை நாராயண கவி, "நீ எழுதியதுதான் நல்ல தமிழ்.." என்று சொன்னவர், ஜனரஞ்சகத்துக்காக எம்.எஸ்.வி. இப்படி கேட்கிறான் என்பதையும் விளக்கியிருக்கிறார்.
இப்படி மோதலில் தொடங்கியதுதான் கண்ணதாசன், எம்.எஸ்.வி. நட்பு. அதன்பின் விரிசலே இல்லா நட்புக்கு உதாரணமாக அமைந்ததும் அவர்களின் நட்புதான்.


இருவரும் பாடலுக்கான உருவாக்கத்தில் ஈடுபடுவதே உற்சாகமான ஓர் அனுபவமாக இருக்கும். "இன்று என்னடா சந்தத்துக்கா, சொந்தத்துக்கா என்பார்" கண்ணதாசன்.
அப்படியென்றால், உன் மெட்டுக்கு (மீட்டர்) நான் பாடல் (மேட்டர்) எழுத வேண்டுமா, இல்லை என் பாடலுக்கு நீ மெட்டமைக்கிறாயா? என்று அர்த்தம்.


ஒரு முறை கண்ணதாசன் மிகவும் மகிழ்ச்சியாக எம்.எஸ்.வியிடம் கூறினாராம், டேய்.. நான் சொந்தமாக படம் எடுக்கிறேன். அதில் பத்துப் பாடல்கள். அத்தனையையும் நான் எழுதிக் கொடுத்துவிடுவேன். அந்தப் பாடல் வரிகளுக்குத்தான் நீ மெட்டமைக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.


எம்.எஸ்.வி.யும் அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு இசையமைத்தார். பத்துப் பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றன. தமிழ்த் திரையுலகில் டி.ஆர்.மகாலிங்கம் என்னும் கலைஞரை அடையாளம் காண்பதற்கு உதவிய அந்தத் திரைப்படம் `மாலையிட்ட மங்கை'. அந்தப் படத்தில் இடம்பெற்ற செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடலைப் பாடிய டி.ஆர்.மகாலிங்கம் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறார்.


கண்ணதாசனுக்கும் எம்.எஸ்.விக்கும் இடையே ஏற்பட்ட செல்லமான கோபதாபங்கள்கூட பாட்டாகப் பரிமளித்திருக்கின்றன. ஒருமுறை சிங்கப்பூரில் மே மாதம் நடக்கும் மலர்க் கண்காட்சியில் ஒரு பாடல் காட்சியை எடுக்க வேண்டும். அதற்குள் பாடலை முடித்துக் கொடுங்கள் என்று ஒரு நிறுவனத்தினர் எம்.எஸ்.வியிடம் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். இதைப் பலமுறை கண்ணதாசனிடமும் எம்.எஸ்.வி. சமயம் கிடைக்கும் போதெல்லாம் நினைவூட்டி, அதற்கான பாடலைத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.


அப்படி ஒருமுறை கேட்கத் தொடங்கிய எம்.எஸ்.வியை, "என்னடா சும்மா மே... மே...ன்னு கத்திட்டிருக்கிறே..." என்று கண்ணதாசன் செல்லமாகக் கடிந்துகொண்டு, அளித்த பல்லவி, "அன்பு நடமாடும் கலைக்கூடமே / ஆசை மழை மேகமே..."


திட்டினாலும் மேன் மக்கள் மேன் மக்களே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x