Published : 10 Jun 2022 04:25 PM
Last Updated : 10 Jun 2022 04:25 PM

கலைஞர் 100 - 2 | 36 வருடத்துக்குப் பின் கலைஞரின் நினைவாற்றல்!

பன்முகக் கலைஞர் சிவகுமார்

ஓவியக் கலை, நடிப்புக் கலை, வாழும் கலை, எழுத்துக் கலை, பேச்சுக் கலை என வாழும் கலைகளில் தன் தடங்களை அழுந்தப் பதித்து வருபவர் பன்முகக் கலைஞர் சிவகுமார். அவர் கைதொட்ட கலைகள் அத்தனையிலும் தமிழ் வாழ்க்கையும் வாழிடங்களும் இடம்பெற்று வருவதன் மூலம் தமிழ்கூறும் நல்லுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர். அப்படிப்பட்டவர் தன்னை ஆர்கஷித்த ஆளுமைகளைப் பற்றியும் பதியத் தவறவில்லை. கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, அவருடனான தனது வாழ்க்கை அனுபவங்களை ‘கலைஞர் -100’ தொடரின் வழியாகப் பகிர்ந்து கொள்கிறார். இனி சிவகுமார் உங்களோடு:

“அது 1988 வருடம், நவம்பர் 14-ம் தேதி. சென்னை சாலிகிராமத்தில் இருந்த அருணாசலம் ஸ்டுடியோவுல ‘மனித ஜாதி’ படப்பிடிப்புல இருந்தேன். கலைமணிதான் படத்தை தயாரிச்சு, டைரக்ட் பண்ணிகிட்டிருந்தாரு. நாலு மணி வாக்குல ஒரு போன் வந்தது. கனிமொழி பேசினாங்க. ‘சார், அப்பா உங்க வீட்டுக்கு இன்னிக்கு வர்றேன்னிருக்காங்க’ன்னாங்க. எனக்கு ‘ஷாக்!’. ‘ஏம்மா நீயும், அம்மாவும்தானே பெயிண்டிங்ஸ் பார்க்க வர்றேன்னீங்க? உண்மையிலேயே அப்பா வர்றாரா?’ன்னு கேட்டேன். ‘ஆமா’ன்னாங்க. எனக்கு இன்ப அதிர்ச்சியாயிருந்தது!

படப்பிடிப்பை உடனே ஸ்டாப் பண்ணிட்டு 5 மணிக்கு கிளம்பி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில வர்றேன். பாண்டி பஜார் வந்துருச்சு. ஒரு மாலை வாங்கிட்டேன். வீட்டுக்குப் போன 10 நிமிஷத்துல கனிமொழி, ராஜாத்தி அம்மா, கலைஞர் கார்ல வந்தாங்க. அவருக்கு மாலை போட்டேன். ‘என்னய்யா மாலை?’ன்னு கேட்டாரு. ‘மூணு தடவை முதலமைச்சரா இருந்தவர் நீங்க. வீட்டுக்கு வர்ற உங்களுக்கு இதைக் கூட செய்யலைன்னா எப்படி?’ன்னு சொன்னேன். உள்ளே கூட்டீட்டுப் போனேன். ஒன்றரை மணி நேரம் பொறுமையா என் பெயிண்டிங்ஸ் பார்த்தாரு!’ன்னா எப்படியிருக்கும்?

சிவகுமார் வரைந்த ஓவியம்

தமிழை நேசிக்க வைத்த எழுத்து

கலைஞர் முகம் அறிமுகமாகும் முன் அவர் எழுத்துகள் தான் என் நேசிப்புக்கு உள்ளாயின. பராசக்தி, மனோகரா, அனார்கலி, சேரன் செங்குட்டுவன் பட வசனங்கள் 10, 12 வயதில் முதலில் மனப்பாடமாகி விட்டன. அதன் பிறகுதான் திமுகவில் அவரும் ஒரு தலைவர் என்பதை அறிந்து கொண்டேன். பள்ளிப் பாடங்களை விட அவரது அடுக்கு மொழி, உணர்வுபூர்வமான வசனங்களும், பின்னாளில் அவர் எழுதிய ‘சங்கத்தமிழ்- குறளோவியம்’ போன்ற நூல்களும் தமிழை நேசிக்கக் காரணமாயின.

‘சிவகுமார் நூறு பூக்களை மூச்சு விடாமல் சொல்லி அசத்துவார்’என்கிறீர்களே அந்த 100 பூக்களின் பெயரை சங்கத் தமிழ் நூலின் முதல் பாடலில் கபிலப் புலவன் குறிப்பிட்டதைத்தான் மனப்பாடம் செய்தேன். ஓவியக் கல்லூரியில் படித்த காலங்களில், மெரினா கடற்கரையில் திமுக கூட்டங்கள் அடிக்கடி நடக்கும். 6.30 மணிக்கு மாலையில் தொடங்கினால் கடைசியில் கலைஞர், அடுத்து அண்ணா பேசும்போது 10 மணி ஆகி விடும். பலநாள் இரவு சாப்பாடு, சாப்பிட முடியாமல் ஒரு வாழைப்பழமும், ஆரஞ்சு சோடாவும் சாப்பிட்டுப் பசியாற்றிய சம்பவங்கள் பல உண்டு.

கொல்லர் உலையில் இரும்பை வைத்து படிப்படியாகச் சூடேற்றி, செக்கச்செவேல் என்று இரும்பு ஆன பிறகு வெளியே எடுத்துச் சம்மட்டியில் அடிப்பது போல், கலைஞர் உரை கொஞ்சம், கொஞ்சமாக சூடேற்றி உச்சத்தைத் தொடும்போது கூட்டம் உணர்ச்சிப் பெருக்கால் தங்களை மறந்து கைதட்டும் கணங்களை நான் பலமுறை பார்த்தவன்.

கலைஞரைப் பேட்டி கண்டபோது...

கலைஞர் இருந்த மேடையில்...

நடிகனாகி 1973இல் மே மாதம் 29ஆம் தேதி ‘அரங்கேற்றம்’படத்தின் 100வது நாள் விழாவில் - ஏவி.எம் ராஜேஷ்வரி திருமண மண்டபத்தில், முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் கேடயம் பரிசு பெற்றேன். அதன் பிறகு 15 ஆண்டுகளில் அவரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படவில்லை. 1988இல் சிவச்சந்திரன் இயக்கிய, ‘என்னுயிர் கண்ணம்மா’ படத்தின் 50வது நாள் விழா பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. கலைஞர் இருக்கும் மேடையில் நான் முதன் முதலில் பேசியது அன்றுதான். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் லட்சுமி-சிவச்சந்திரன் காதல் முகிழ்ந்து கல்யாணத்தில் முடிந்தது.

பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் ஆகிய இரண்டு படங்களும் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் என்கிற கலைஞரின் குடும்பத் தயாரிப்பு. 1988- மார்ச் 31ஆம் தேதி பாசப்பறவைகள் ரீ-ரிகார்டிங் செய்வதற்கு முன்பு முழுப்படத்தையும் பார்க்க, சென்னை மியூசிக் அகாடமி எதிரில் உள்ள சுப்ரகீத் என்கிற ப்ரிவ்யூ தியேட்டருக்கு கலைஞர் வந்தார். முதன்முறையாக எனது துணைவியாரை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். படம் பார்த்து முடித்தபின், என்னுடைய ‘டொயோட்டா’ காரில் அவரை அமர்த்தி நானே காரை ஓட்டிச் சென்று அவரது கோபாலபுரம் வீட்டில் இறக்கி விட்டு வந்தேன்.

1988 மே மாதம் 25ஆம் தேதி காரைக்குடியில் ‘இசைஞானி’ என்கிற பட்டத்தை இளையராஜாவுக்கு கலைஞர் வழங்கும் நிகழ்ச்சி மகாத்மா காந்தி மைதானத்தில் நடைபெற்றது. பழ.கருப்பையா ஏற்பாடு செய்திருந்தார். தமிழண்ணல், வை.கோ, தென்னரசு, விஜயகாந்த், எஸ்பி. முத்துராமன், ஏ.எஸ்.பிரகாசம், ஜி.கே. வெங்கடேஷ் ஆகியோருடன் நானும் வாழ்த்திப் பேசினேன்.

நேருக்கு நேர் பட ப்ரிவியூ காட்சிக்கு வந்த கலைஞர்

கலைஞரின் நினைவாற்றல்

1988 ஜூன் 17ஆம் தேதி திருவொற்றியூர் எம்எஸ்எம் தியேட்டரில் ‘பாசப்பறவைகள்’ 50 வது நாள் விழா பெருங்கூட்டத்துடன் நடைபெற்றது. ‘சேரன் செங்குட்டுவன்’ என்கிற ஓரங்க நாடக வசனம் கலைஞர் எழுத, ‘ராஜா-ராணி’ படத்தில் சிவாஜி ஒரே டேக்கில், சுமார் 5 நிமிட நீளமுள்ள அந்த வசனத்தைப் பேசி நடித்தது இன்று வரை ஒரு ரிக்கார்டு. அந்த முழு வசனத்தையும் ரசிகர்கள் கூட்டத்தில் கலைஞர் முன் பேசிக் காட்டினேன். ஆனால், அவரோ 1952இல் பராசக்தி திரைப்படம் வெளியான சமயம், திமுக பிரச்சார நாடகத்தில் புறநானூற்றுத் தாயின் பெருமையைச் சொல்லும் நீளமான வசனத்தை, அக்காலத்தில் சிவாஜி நாடகத்தில் பேசியதை - ஒரு வார்த்தை பிசகாமல் பேசி என்னை மிஞ்சி கைதட்டல் பெற்றார். 36 வருடங்களுக்கு முன்பு எழுதிய வசனத்தை அரசியலில் எத்தனையோ நிகழ்வுகள் ஏற்ற, இறக்கங்களைப் பார்த்தவர் -அன்று பேசியது பிரமிப்பாக இருந்தது.

அதே 1988, ஜூலை 17ஆம் தேதி ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழின் சிறப்பாசிரியராக நான் கலைஞரைப் பேட்டி எடுத்தேன். அப்போது அவரிடம், கடவுள் நம்பிக்கை சிறு வயதில் உங்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.. காரணம், உங்கள் தந்தையார் பக்தி மான்., சிறு வயதில் நீங்கள் கும்பிட்ட சாமி பெயர் என்ன? எத்தனை ஆண்டு கும்பிட்டீர்கள்? பகுத்தறிவு சிந்தனை எந்த வயதில் முளை விட்டது? இது ஆன்மிக பூமி. வள்ளுவர், திருமூலர், நாவுக்கரசர், சம்பந்தர் என அத்தனை பெரியோர்களும் இறைவன் இருப்பைப் பற்றிப் பாடியுள்ளார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாத்திகவாதிகள் பெரியார் போல் இருந்திருக்கிறார்களா? என வரிசையாகப் பல கேள்விகள் கேட்டு அவருடைய பதிலை வாங்கிவிட்டு, ‘எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நீங்கள் ஏன் எழுதாமல் விட்டீர்கள்? ஒழுங்காக கல்லூரி சென்று தமிழ் படித்திருந்தால் யாரைப் போல உருவாகி இருப்பீர்கள்” என்கிற கேள்வியைக் கேட்டபோது: ‘ஐஏஎஸ் திரவியம் போல உருவாகியிருப்பேன்!’ என்றார்.

12 வயதில் - ஊமைப் படமாக மகாபாரதம் - அர்ஜூனன் கதையை முதன் முதல் தியேட்டரில் பார்த்ததாகச் சொன்னார். 12 வயதில் ‘செல்வ சந்திரா’ என்கிற நாவலைக் கையெழுத்துப் பிரதியாக எழுதியதாகவும் இன்றும் அது பத்திரமாக உள்ளதாகவும் சொன்னார். எம்.ஆர்.ராதா நாடகத்தை நாகப்பட்டினத்தில் பார்த்தபோது நாமும் இப்படி நாடகம் எழுத வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டு பின்னாளில் ‘தூக்கு மேடை’நாடகத்தை எழுதி எம்,.ஆர். ராதாவுக்குக் கொடுத்ததாகச் சொன்னார்.

கலைவாணரின் போர்ட்ரேய்ட் ஓவியத்தை ரசிக்கும் கலைஞர்

கண்கொட்டாமல் ரசித்த கலைஞர்!

1988 நவம்பர் -14ஆம் தேதி எங்கள் இல்லத்திற்கு கலைஞரும், ராஜாத்தி அம்மாவும், கனிமொழியும் வந்தார்கள். அப்போதுதான் எனது ஓவியங்களை ஒன்றரை மணி நேரம் பொறுமையாக அமர்ந்து பார்த்தார். மகாபலிபுரம் புலிக்குகை ஓவியத்தைப் பார்த்ததும் ‘காஞ்சித் தலைவன்’படத்துக்கு இங்கு சென்றுதான் வசனம் எழுதினேன். அப்போது என்கூட இருந்தவர் எம்.ஜி.சக்ரபாணி’என்றார். ‘இவ்வளவு பெரிய ஓவியனாக, இத்தனை ஓவியங்கள் தீட்டியிருப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்குப் பிறகு ஏனப்பா நடிக்க வந்தாய்?’ என்று கேட்டார். ‘நீங்களெல்லாம் என் வீட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான். நான் வெறும் ஓவியனென்றால் நீங்கள் வருவீர்களா?’ என்றேன். ஓவியங்களை கண்கொட்டாமல் ஆழமாக ரசித்தார்.

1989இல் அக்டோபர் 25ஆம் தேதி என் தாயார் மறைந்தபோது 26ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வந்து மரியாதை செய்து சென்றார். 1997இல் சூர்யாவின் முதல் படம் ‘நேருக்கு நேர்’. ‘நீங்கள் பார்த்து ஆசி கூற வேண்டும்!’ என்றேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள 4 ஃபிரேம்ஸ் ப்ரிவியூ திரையரங்கிற்கு துணைவியாருடன் வந்து பார்த்து, ‘தந்தை எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாய்ச்சல்!’ என்று வாழ்த்தி எழுதிக் கொடுத்தார்.

2007- பிப்ரவரி 21இல் ‘பருத்தி வீரன்’படம் பார்த்து விட்டு வாயடைத்துப் போய் வீடு சென்றார். ‘தம்பி 1942-லிருந்து எனக்குத் திரையுலகுடன் தொடர்பு உண்டு. ‘பருத்தி வீரன்’ படத்தில் ஒரு காட்சி கூட இப்படித்தான் வரும் என்று ஊகிக்க முடியவில்லை. எப்படிப்பா இப்படியெல்லாம் இன்றைய இளைஞர்கள் யோசிக்கிறார்கள். அந்த கிளைமாக்ஸில் லாரிக்காரர்கள் கதாநாயகியைப் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சியின் பாதிப்பால் எனக்கு 3 நாட்களாக எனக்குத் தூக்கம் வரவில்லை.

ஒரு வீடு. கதவு திறந்திருக்கிறது. உள்ளே கும்மிருட்டு, ஒரு லாரிக்காரன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உள்ளே போய் இருளில் மறைகிறான். அடுத்து ஒருவன். அதற்கு அடுத்து ஒருவன். ‘விடுங்கடா.. வலி தாங்க முடியலே, போங்கடா!’ பெண் முனகும் சத்தம். இப்படி ஒரு வலியான காட்சியை நான் பார்த்ததே இல்லை!’ என்றார்.

சிவகுமார், அவரது மகள் பிருந்தா, மகன் கார்த்தி, கலைஞரின் மகள் கனிமொழி, ராசாத்தி அம்மாள், கலைஞர்

கலைஞரை வரைந்தேன்

2006இல் செப்டம்பர் 11ஆம் தேதி சூர்யா-ஜோதிகா திருமணம் அடையாறு பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. நேரில் வந்து மாங்கல்யம் தொட்டு ஆசி கூறினார். 2007இல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெரியார் ஓவியம் தீட்டினேன். எனது ஓவியங்களைப் பார்த்த சகோதரர் வைகோ, ‘பெரியார் படம் வரையாமல் உங்கள் ஓவியக்கலை முழுமை அடையாது’ என்றார். பெரியாரை வரைந்து கலைஞரிடம் காட்டியபோது மெளனமாகப் புன்னகைத்தார். ‘அது சரி, என்னை எப்போது வரையப் போகிறாய்?’ என்று கேட்டார். நான் பேசாமல் இருந்தேன். ‘நீங்கள் கருப்புக்கண்ணாடி அணிந்துள்ளீர்கள். ஓவியத்திற்கு அழகே கண்கள்தான். உங்களுக்கு அழகான காந்தக் கண்கள். அப்படி ஒரு படம் வேண்டும். தலையில் முடியுடன் இருந்தால் இன்னும் நல்லது. என் இளமைக்கால கலைஞரின் தோற்றம். அதையே வரைந்து தருகின்றேன்!’ என்றேன்.

அவர் 1969இல் முதல்வராக 45 வயதில் பதவி ஏற்றபோது அலுவலகங்களில் வைக்க எடுத்த புகைப்படத்தின் பிரதி கிடைத்தது. நடு வகிடு. அலை, அலையாகச் சுருள்முடி. ராஜபல்லின் கீழ் பகுதி சற்றே உள்வாங்கி இருக்கும். எப்போதும் சிரித்த களையான முகம். இரண்டு கண்களுக்கும் இடையே உள்ள இடைவெளி சற்று அதிகம் இருக்கும். அதை வரைந்து கொடுத்த போது அவரது பார்வையில் நன்றியும் நெகிழ்ச்சியும் தெரிந்தது.

2009, நவம்பர் 15ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் முக்தா சீனிவாசனின் 80-வது பிறந்த நாள் விழா கலைஞர் தலைமையில் நடை பெற்றது. 1949இல் மந்திரிகுமாரி படத்துக்கு வசனம் எழுத சேலம் சென்ற காலம் தொட்டு முக்தாவுக்கும் இவருக்கும் உள்ள நட்பை விளக்கிப் பேசினேன்.

கடைசி சந்திப்பு

2017- செப்டம்பர் 13ஆம் தேதி கடைசியாக உயிரோடு அவரை கோபாலபுரம் வீட்டில் சந்தித்தேன். 90 சதவீதம் நினைவுகள் மறந்த நிலை. மனோகரா -தர்பார் சீனில் சிவாஜி பேசும் உணர்ச்சி மிக்க கலைஞர் வசனத்தை நான் பேசி வீடியோவில் பதிவு செய்து, கலைஞர் வீட்டின் டீவி திரையில் போட்டு வால்யூமைக்கூட்டி அவரைக் கேட்கச் செய்தேன்.

‘புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டும் விழியிலே உலகத்தைக் காண்பவரே என்று ஆரம்பித்து... பாவி பார் பத்தினியை இழந்த படுபாவி பார்! நீயும் உன் பஞ்சணை ராணியும் படும் பாட்டை பார்!’ என்று உரக்க கத்தி- வாளை சிவாஜி உருவும் வசனம் கேட்ட போது சிலையாக இருந்த அவர் முகத்தில் வலது கண்ணின் ஓரம் ஒரு நீர்த்திவலை உருண்டு கன்னத்தில் சரிந்தது. பாதம் தொட்டு வணங்கி விடைபெற்றேன்.

கட்டுரையாளர்: பன்முகக் கலைஞர் சிவகுமார்
தொடர்புக்கு: filmactorsivakumar@gmail.com

குறிப்பு: இங்கு வெளியாகியிருக்கும் ஓவியம் காப்புரிமை கொண்டது. காப்பி செய்யவோ மீள் பயன்படுத்தவோ அனுமதியில்லை. கட்டுரையின் இணைப்பைப் பகிருங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x