Published : 06 Jun 2022 05:16 PM
Last Updated : 06 Jun 2022 05:16 PM

குழந்தைகளையும் பாதிக்கும் கண்புரை நோய்: காரணங்களும் அறிகுறிகளும்

பிரதிநிதித்துவப் படம்

கண்ணில் உள்ள லென்ஸில் வெள்ளை நிறப் படிமம் படிவதே கண்புரை. கண்புரையால் பாதிக்கப்பட்டிருக்கும் லென்ஸ் ஒளியை அனுமதிக்காது. இதன் விளைவு, பார்வை மங்கலாகத் தெரியும். கண்புரையானது ஒரு கண்ணிலோ இரு கண்ணிலோ வரலாம். பொதுவாகக் கண்புரை பெரியவர்களையே அதிகம் பாதிக்கும். இருப்பினும். அது குழந்தைகளையும் சிறுவர்களையும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.

குழந்தைகளின் கண்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், அவர்களுக்குக் கண்புரை ஏற்பட்டிருந்தால் அதற்கு உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சையைத் தாமதப்படுத்தினால் சோம்பேறிக் கண் எனும் குறைபாடு ஏற்படுவதற்குச் சாத்தியம் உண்டு.

வகைகள்:

பிறவிக் கண்புரை, இளம் வயதில் ஏற்படும் கண்புரை என இதில் இருவகை உள்ளன.

பிறவிக் கண்புரை என்பது பிறந்த குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே இருக்கும் கண்புரை.

இளம் வயதில் ஏற்படும் கண்புரை என்பது சிறுகுழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்படுவது.

காரணங்கள்:

குழந்தைகளுக்குக் கண்புரை ஏற்படுவதற்கான சரியான காரணங்களை இன்னும் கண்டறிய முடியவில்லை. பிறவிக் கண்புரை ஏற்படுவதற்கு மரபணுச் சிக்கல்களோ, கருவுற்ற காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட தொற்று நோய்களோ காரணமாக இருக்கலாம்.

இளம் வயதில் ஏற்படும் கண்புரை என்பது கண்ணில் அடிபடுதல், ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்று, களக்டோஸமியா (பாலில் உள்ள சர்க்கரை, உடலில் கலக்காததால் ஏற்படும் குறைபாடு), நீரிழிவு போன்ற காரணங்களால் ஏற்படக்கூடும்.

அறிகுறிகள்:

  • மோசமான பார்வை
  • வேகமான கண் அசைவுகள்
  • வெவ்வேறு திசைகளைப் பார்த்தபடி கண்கள் இருப்பது
  • வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் கருவிழி இருப்பது.

இந்த அறிகுறிகள், குழந்தைகளிடம் உள்ளதா என்பதைக் கண்டறிவது சற்று சிரமமான காரியமே. பிறரைக் கண்டறியவோ பொருட்களைப் பார்க்கவோ குழந்தைகள் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால், அவை உங்களுடைய குழந்தையின் பார்வையில் ஏதோ குறைபாடு உள்ளது என்பதை அறிவிக்கும் எச்சரிக்கைக் குறிப்பு.

சிகிச்சைகள்:

அறுவை சிகிச்சை ஒன்றே கண்புரைக்கான சிகிச்சை. சில குழந்தைகள், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்ணாடி அணிய வேண்டியிருக்கும். கண்புரை என்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டதும் எவ்வளவு சீக்கிரம் அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். அறுவை சிகிச்சைக்கு முன்னதாகக் குழந்தைகளுக்கு வலி தெரியாமல் இருக்க, மயக்க மருந்து கொடுக்கப்படும். மிகப் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதுடன் குறைவான நேரத்தில் முடிந்துவிடும். பெரும்பாலான நேரங்களில் மிகத் தெளிவான பார்வை அப்போதே கிடைத்து விடும்.

> இது, முகமது ஹுசைன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x