Last Updated : 02 Jun, 2022 04:58 PM

 

Published : 02 Jun 2022 04:58 PM
Last Updated : 02 Jun 2022 04:58 PM

சென்னையில் திருநருக்காக இலவச நடனப் பள்ளி

கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை கல்வி, மருத்துவச் சேவைகளை அளிப்பதோடு, திருநர் சமூகத்தினருக்காக இரண்டு இடங்களில் நடனப் பள்ளிகளை இலவசமாக நடத்துகிறது. இதன் நிறுவனர் கே.என். ஆனந்தகுமார், திருநங்கைகள் சமூகத்துக்கு உதவிவரும் சகோதரன் தன்னார்வ அமைப்பின் மூலம் சென்னையிலும் இலவச பரதநாட்டியப் பள்ளியை அண்மையில் தொடங்கினார்.


சென்னை, சூளைமேடு பகுதியில் செயல்படவிருக்கும் இந்த பரதநாட்டியப் பள்ளியில் பதினைந்து பேர் நடனம் கற்பதற்காகச் சேர்ந்துள்ளனர். திருநங்கை பொன்னியின் பரதநாட்டியத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது. திருநங்கை நாட்டியப் பள்ளியை சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார். டாக்டர் நெடுங்காடி ஹரிதாஸ், டாக்டர் சுனில், நடனக் கலைஞர் டாக்டர் காயத்ரி சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வால்மீகி முனிவரின் பாடலுக்கு, மிகக் குறுகிய காலத்தில் பயிற்சி எடுத்து மாணவிகள் அற்புதமான ஒரு நடனத்தை வழங்கினர். நடனம் பயில்வதற்காகச் சேர்ந்திருக்கும் மூன்று மாணவிகளிடம், “நடனப் பள்ளியில் சேர்வதற்கு என்ன காரணம் என்று கேட்டோம்?”


ராஷ்மிதா
நான் பிறந்த ஊர் தூத்துக்குடி. ஐந்து வயதிலிருந்தே எனக்கு நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. முதலில் வறுமையின் காரணமாக வேண்டாம் என்றனர் வீட்டார். பதினைந்து வயதில் மீண்டும் நடனம் கற்கும் ஆசை எனக்குள் துளிர்த்தது. ஊரில் பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியையிடம் நானே கேட்டேன். அதற்கு அவர், “பெண்களுக்குத்தான் நான் நடனம் கற்றுக் கொடுப்பேன்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். அப்போது புதைத்த ஆசை இப்போதுதான் சென்னையில் இந்த நடனப் பள்ளியின் வாயிலாக மீண்டும் துளிர்விட்டுள்ளது.
கயல்
பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். இது ஓர் அரிய வாய்ப்பு. இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, நடனத்தில் பிரகாசிக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்.


திஷா
சின்ன நாட்றம்பள்ளி என்னும் கிராமம்தான் நான் பிறந்த ஊர். நான்கு வயதிலிருந்தே எனக்கு நடனத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பொதிகை தொலைக்காட்சியில் பிரபலமானவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளின் மூலம்தான் எனக்குப் பரதநாட்டியம் அறிமுகமானது. என்னுடைய தம்பிகள் கிரிக்கெட் ஆடுவதற்குப் போவார்கள். நான் வீட்டில் இருக்கும் பானையைக் கவிழ்த்துப் போட்டு அதன் மீது ஏறி நடனம் ஆடுவதற்கு முயல்வேன். அதன் பிறகு, நானாகப் பார்த்து நடனம் ஆடத் தொடங்கினேன். நர்த்தகி அம்மா, பொன்னி மாஸ்டர் எல்லோரின் நடனங்களையும் தொடர்ந்து பார்ப்பேன். எனக்கு மிகவும் பிடித்த நடனக் கலைஞர் நோரா ஃபதேஹி. பரதம், கதக் தொடங்கி நடனத்தின் பல வகைமைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் ஆவல் இருக்கிறது. அதற்கான முதல் படியை இப்போது எடுத்து வைத்திருக்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x