Published : 20 May 2022 02:41 PM
Last Updated : 20 May 2022 02:41 PM

ஊட்டமேற்றப்பட்ட அரிசி: முரண்பாடுகளும் தீர்வுகளும் - ஒரு விரைவுப் பார்வை

அனைத்து ஏழைகளுக்கும் 2024-க்குள் ஊட்டமேற்றப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட உள்ளதாகப் பிரதமர் மோடி கடந்த சுதந்திர நாளன்று அறிவித்தார். மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்குத் தீர்வாக இது முன்வைக்கப்படுகிறது. இந்த ஊட்டமேற்றப்பட்ட அரிசியில் எந்த அளவில் எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கும் என்கிற வகையில் அதிலுள்ள ஆபத்துகளும் முரண்பாடுகளும் அதற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.

நமது உடலில் நொதிகளும் ஹார்மோன்களும் சுரப்பதற்கு நுண்ணூட்டச் சத்துகளே உதவுகின்றன. அந்த வகையில் அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துகளை உணவு தானியங்களில் கலந்து, அவற்றின் மூலம் மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க முயல்வதே ஊட்டமேற்றப்பட்ட அரிசிக்கான அடிப்படை. இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், துத்தநாகம், வைட்டமின்கள் ஏ, பி-1, பி-2, பி-3, பி-6, பி-12 ஆகியவற்றை ‘Extrusion’ எனும் நடைமுறை மூலம் தானியங்களில் கலந்து ஊட்டமேற்றப்படுகிறது.

மத்திய உணவு அமைச்சகம் கூறுவதன்படி இந்தியாவில் பெண்கள், குழந்தைகளிடையே மிக மோசமான ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவிவருகிறது. நாட்டில் இரண்டில் ஒரு பெண் ரத்தசோகையாலும், மூன்றில் ஒரு குழந்தை வளர்ச்சிக் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் களைவதற்கு அரிசி ஊட்டமேற்றுதல் தேவைப்படுவதாக அரசு கூறுகிறது.

அரிசிக்கு ஊட்டமேற்றுதலைக் கட்டாயப்படுத்துவது, அது சார்ந்த மிகப் பெரிய சந்தையை உருவாக்கும். அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஆண்டுக்கு 3.4 கோடி டன் அரிசி தேவைப்படுகிறது. அரிசியில் ஊட்டமேற்றுவதற்கு ஒரு கிலோவுக்கு ரூ.73 காசு செலவிடப்படும். ஒரு கிலோவுக்கு என்று பார்க்கும்போது இது குறைவான தொகையாகத் தெரிந்தாலும், பல கோடி கிலோ அரிசி வாங்கப்படும்போது, விலை பல நூறு கோடி அதிகரித்துவிடும். மக்களைவிட தொழில் நிறுவனங்களுக்கே ஊட்டமேற்றுதல் அதிக லாபத்தைத் தரக்கூடும் என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

பொதுவாக, நேரடி உணவு வகைகளில் உள்ள சத்துகளை உடல் மேம்பட்ட வகையில் கிரகித்துக்கொள்கிறது. சிலருக்குக் குறிப்பிட்ட சத்துகள் பற்றாக்குறை ஏற்படும்போது, தரப்படும் சத்து மாத்திரைகள், துணைமருந்துகளிலிருந்து நுண்ணூட்டச் சத்து கிரகித்துக்கொள்ளப்படும் விகிதம் குறைவு என்பதை மருத்துவ ஆய்வுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஊட்டமேற்றப்பட்ட அரிசியிலும் அதுவே உண்மை.

அரிசியைத் தாண்டி எத்தனையோ தானியங்கள் உள்ளன. உணவு உட்கொள்ளலைப் பன்முகப்பட்டதாக மாற்றாமல், வெறுமனே ஒரு தானியத்துக்கு ஊட்டமேற்றுவதால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று நம்புவது சரியல்ல. ஊட்டமேற்றப்பட்ட உணவு வகைகளைக் கட்டாயமாக்குவதற்குப் பதிலாக, ஒருவருடைய சரிவிகித உணவை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

இறைச்சி, விலங்கு சார்ந்த உணவு, காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள அறிவுறுத்த வேண்டும். பிறந்த குழந்தையிடம் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கு, முதல் ஆயிரம் நாட்களில் பாலூட்டுதலை உத்தரவாதப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்படாத, பட்டை தீட்டப்படாத அரிசியைப் பொது விநியோகத் திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். பட்டை தீட்டப்படாத அரிசியில் நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்திருக்கின்றன.

> இது, ஆதி வள்ளியப்பன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x