Published : 07 May 2022 03:48 PM
Last Updated : 07 May 2022 03:48 PM

‘செயற்கை’ முறையில் கையாளப்பட்ட மாம்பழம், தர்பூசணியைக் கண்டறிவது எப்படி?

அனைத்துத் துறையிலும் தொழில் சார்ந்த உத்திகள் உண்டு. ஆனால், உணவு சார்ந்த விஷயத்தில் அறமற்ற செயல்பாடு நடைபெறுகிறதெனில் பாதிக்கப்படப் போவது நாம்தான்.

ஒரு பழ மண்டியிலிருந்து பள்ளிக் குழந்தைகளுக்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கோ செயற்கை வேதிப்பொருட்களின் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை வாங்கிச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம், அதனால் பாதிப்பு ஏற்படுமானால் யார் பொறுப்பு? அது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வேதித் தாக்குதலுக்கு ஆட்பட்ட பழங்களை வாங்கிச் செல்லும் நாமும் ஏதோ ஒரு வகையில் குற்றவாளிகள்தானே!

கால்சியம் கார்பைடு கற்கள்: மாங்காய்களை கால்சியம் கார்பைடு கற்களை வைத்துப் பழுக்கவைக்கும் செயல்பாடு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. கால்சியம் கார்பைடு கற்கள் ‘அசிடலைன்’ வாயுவை வெளியிட்டு செயற்கையாகப் பழங்களைப் பழுக்க வைக்கின்றன. வெல்டிங் கடைகளில் பயன்படுத்தப்படும் கார்பைடு கற்கள், உணவு சார்ந்த பழங்களோடு தொடர்புகொண்டால், அதைச் சாப்பிடும் நமக்கு எவ்வளவு பாதிப்புகள் உண்டாகும் என்பதை அனுமானிக்க முடிகிறதா?

நீண்ட நாட்களுக்கு கார்பைடு கற்களின் உதவியால் பழுத்த பழங்களைச் சாப்பிடும்போது பேதி, வயிற்றுப் புண் தொடங்கி புற்றுநோய் வரை ஏற்படும் சாத்தியம் உண்டு. கல்லீரலையும் பாதிக்கலாம்!

எப்படிக் கண்டுபிடிப்பது?

மாம்பழம்: கார்பைட் கற்களின் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களுக்குள் வெளிர் மஞ்சள் நிறம் இருப்பதைப் பார்க்க முடியும். சாப்பிட்டவுடன் லேசான தொண்டை எரிச்சல், வயிறு எரிச்சல் போன்றவை ஏற்படலாம். மாம்பழத்தின் மீது வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அக்காலத்தில் மஞ்சள் புல், வைக்கோல் பரப்பி அதற்கிடையில் மாங்காய்களை வைத்துப் பழுக்கச் செய்யும் முறை இக்காலத்திற்கும் உகந்தது. அரிசிப் பானைக்குள் மாங்காய்களைப் போட்டு, அவை பழமாக மாறும் வரை காத்திருந்த நாட்கள் சுவைமிக்கவை! அரிசிப் பானைக்குள் மாங்காய்களைக் கண்டுபிடித்து விளையாடுவது அக்காலச் சிறுவர்களின் பொழுதுபோக்கும்கூட!

தர்பூசணி: இரண்டாக வெட்டிய தர்பூசணி யில் பஞ்சுவைத்துத் துடைத்தால் சிவப்பு நிறம் ஒட்டிக் கொள்ளும். பொதுவாக தர்பூசணியை நன்றாகப் பிசைந்தால்தான் சிவப்பு நிறம் இழையோடும். ஆனால், நிறமி செலுத்தப்பட்ட தர்பூசணிப் பழத்தைத் தண்ணீரில் கழுவினாலே சிவப்பு நிறம் வழிந்தோடுவதைப் பார்க்கலாம்.

> இது, டாக்டர் வி.விக்ரம்குமார் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x