Published : 02 May 2022 06:56 PM
Last Updated : 02 May 2022 06:56 PM

ஆன்லைன் கேம்களுக்கு அடிமையான 100-க்கும் மேற்பட்டோரை மீட்ட ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

சென்னை: இணையதளங்களுக்கும், ஆன்லைன் கேம்களுக்கும் அடிமையான 100-க்கும் மேற்பட்டவர்களை, அந்தப் பாதிப்பிலிருந்து மீட்டுள்ளனர் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள். இவர்களில் சிறுவர்களுடம் அடங்குவர். இது எப்படி சாத்தியமானது? - இதோ ஓர் உதாரண நிகழ்வு...

சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்ட பிறகு, நிறைய நேரம் ஆன்லைன் விளையாட்டுகளை அவர் விளையாடத் தொடங்கினார். அசாதாரண கை அசைவுகள், மொபைல் கேம்களை விளையாடுவதற்கு இரவு வெகுநேரம் விழித்திருப்பது, கல்வியில் ஆர்வமின்மை மற்றும் தேர்வு எழுத ஆர்வமின்மை போன்ற பிரச்சினைகளுடன் அவர் தனது தாயாரால் அழைத்து வரப்பட்டார்.

குறிப்பாக ஃப்ரீஃபயர், ரோப்லாக்ஸ் போன்ற ஆன்லைன் கேம்களை பெரும்பாலான நேரம் கேம்களை அவர் விளையாடினார். நள்ளிரவுக்குப் பின் 3 மணி வரை விழித்திருந்து நண்பர்களுடன் விளையாடி வந்தார். இதன் காரணமாக வீட்டில் இருப்பவர்களுடன் பேசுவதைக் குறைத்தார் அந்தச் சிறுவன். இது தெரிந்த பெற்றோர்கள் கண்டித்தபோது, ​தான் ஆன்லைன் விளையாட்டை விட்டு விடுவதாகவும் தெரிவித்தார். ஆனால், அவரால் மீள முடியவில்லை. மேலும், பசி குறைந்து உடல் எடை குறைந்தது.

இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இணையதள சார்பு நிலை மீட்பு மையத்தில் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த மையத்தில் அவரை பரிசோதித்தபோது, ​​மிகவும் மெலிந்து எடை குறைந்து காணப்பட்டார். ஆரம்பத்தில், பார்வைத் தொடர்பை தவிர்த்து, ஒற்றை எழுத்துகளில் மட்டுமே பதிலளித்தார்.

இதன்பிறகு சிகிச்சை தொடங்கி 4 நாட்களுக்கு ஒருமுறை அவருக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டது. மொபைல் பயன்பாடு ஒரு நாளைக்கு 1 மணிநேரத்திற்கு கட்டுப்படுத்தப்பட்டது. அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டது. தற்போது அவர் சிச்சையில் இருந்தாலும் புத்தகம் வாசிப்பு போன்றவற்றில் ஈடுபடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதைப்போன்று 100-க்கு மேற்பட்ட சிறுவர்கள் இந்த இணையதள சார்பு நிலை மீட்பு மையம் சிகிச்சை பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

இணைய அடிமையாதல் என்று அழைக்கப்படும் இணைய கேமிங் அடிக்‌ஷன், ஆன்லைன் சூதாட்ட அடிமையாதல் மற்றும் பல்வேறு சார்பு நிலைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணையதள சார்பு மீட்பு மையத்தில் தனிநபர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, நோயின் தீவிரம் ஆய்வு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே இதுபோன்றவர்கள் இந்த மையத்தில் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x