Last Updated : 26 Apr, 2022 10:05 PM

 

Published : 26 Apr 2022 10:05 PM
Last Updated : 26 Apr 2022 10:05 PM

மன அழுத்தத்தால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? - விவரிக்கும் மனநல மருத்துவர்

"மன அழுத்தம் என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான். மனிதனுக்கு உணர்ச்சிகள் அதிகமாவதும், ஒரு சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் பொதுவான ஒன்று. மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தம் என்பது பல காரணங்களால் ஏற்படும். சுற்றுப்புறத்தில் இருந்து வரலாம், நம் உடலில் இருந்தே வரலாம், நம் சிந்தனையில் இருந்து மன அழுத்தம் வரலாம். தேர்வு நேரத்தில் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருக்கும், அது மன அழுத்தமாக மாறலாம். நாம் அனைவராலும் மன அழுத்ததை மிகச் சுலபமாக வெல்ல முடியும்" என்கிறார் மனநல மருத்துவர் செல்வராஜ், மேலும், அவர் மன அழுத்ததின்போது, நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என தெளிவாகக் கூறியுள்ளார்.

"முதலில் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் மன அழுத்தத்தை ஒரு பாசிடிவ் பொருளாக பார்க்க வேண்டும். மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது, ஒரு விஷயத்தைக் குறித்து பதற்றப்படும்போதுதான் மன அழுத்தம் பெறுகிறது. எனவே, நமக்கு இது ஓர் அலர்ட் என கருதி, எதைக் குறித்து நாம் பயப்படுகிறோமோ, எதைக் குறித்து பதற்றப்படுகிறோமோ, அதை எப்படி சரி செய்வது, எப்படி அதில் வெற்றியடைவது என அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிந்த அளவு மன அழுத்தம் ஏற்படாதவாறு சிந்தனையை பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியே குழப்பம் ஏற்பட்டாலும், இது 'பாசிடிவ் மோட்' தான் என சொல்லிக்கொண்டு வேலையை தொடர வேண்டும். ஏனென்றால், மன அழுத்தத்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் பாதிப்பாகவும் மாறும்'' என்றவர், மாற்றங்களை பின்வருமாறு விவரித்தார்.

*ஒருவர் மன அழுத்தத்தோடு இருந்தால் அவரது சுவாச அமைப்பு உடனடியாக பாதிப்படையும். மூச்சு விடுவதற்கு சிரமப்படுவர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், ரத்த ஓட்டம் சீராக இருக்காது. மூச்சை உள் இழுப்பதற்கே சிரமமாக இருக்கும். ஒருவர் மிகுந்த பதற்றத்தோடு இருந்தாலும் இது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

> மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை அழித்துவிடும். 'கார்டிசோல்' என்பது ப்ரைமரி மன அழுத்த ஹார்மோன். மன அழுத்தம் ஏற்படும்போது, இது சுரப்பதால் எதிர்ப்பு சக்திகளை அடக்கி விடுகிறது. மேலும், இன்ஃப்ளமேட்டரி வழியையும் சிதைக்கிறது. இதனால் உடல் பேக்டீரியா மற்றும் வைரஸுடன் போராட முடியாமல் உடல் சீரற்று போய்விடும்.

> மன அழுத்தத்தால் தசை மற்றும் எலும்பு பகுதிகளும் பாதிப்படையும். இயல்பாகவே உடலின் சதைப் பகுதி, உடலின் உட்புற பாகங்களை பாதுகாக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டால் தசைப் பகுதிகள் வலுவிழக்கும் மற்றும் தோள்பட்டை, கழுத்து, முதுகு பகுதிகளில் வலி ஏற்படும். தலைவலி பலமாக இருக்கும்.

> மன அழுத்தத்தினால் இரத்த ஓட்டம் அதிகமாகும். மனம் திரும்ப பழைய நிலைக்கு வந்துவிட்டால், சரியாகிவிடும். ஆனால் தொடர்ந்து ஒரு நபர் ஒரே விஷயத்தாலோ அல்லது ஒரே அளவில் மன அழுத்தத்தில் இருந்தால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

> மன அழுத்தத்தினால் நாளமில்லா அமைப்பு பாதிக்கப்படும். நாளமில்லா அமைப்பு உடலில் அதிக வேலை செய்கிறது. சிந்தனை, திசுக்களின் செயல்பாடுகள், மெட்டாபாலிஸம் இதனால் பாதிக்கப்படும். மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், நாளமில்லா அமைப்புடன் நரம்பு மண்டலத்தை இணைக்கிறது. மன அழுத்தம் ஏற்படும்போது இதுதான் கார்டிசோலை தூண்டுகிறது.

*மன அழுத்தம் ஏற்படும்போது இரைப்பை குடலில் பாதிப்புகளும் ஏற்படும். சரியான செரிமான இருக்காது. மன அழுத்தத்தின் போது உணவுப் பழக்கம் மாறும். அதை இரைப்பை ஏற்காது. இதனால் வயிறு வலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

*மன அழுத்தத்தின் விளைவாக இனப்பெருக்க அமைப்புகள் பாதிக்கப்படும். தொடர் மன அழுத்தத்தால் டெஸ்டோஸ்டெரோன் மற்றும் ஸ்பெர்ம் உற்பத்தியாவது பாதிக்கப்படும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x