

கேரளாவைச் சேர்ந்த 60 வயது முதியவர் மம்மிக்காவின் மாடலிங் வீடியோதான் இன்றைய சமூக வலைதள சென்சேஷனாக உள்ளது. அன்றாடம் உழைத்து சம்பாதிக்கும் கூலித் தொழிலாளியான மம்மிக்கா ’மாடல்’ ஆன கதை சுவாரஸ்யம் நிரம்பியது.
அரபிக் கடலோரம் உள்ள கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம்தான் மம்மிக்காவின் சொந்த ஊர். பொதுவாக லுங்கியும் சட்டையும்தான் இவருடைய ட்ரேட் மார்க் ஆடை. ஒருநாள் இவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கு புகைப்படக் கலைஞர் ஷரீக் வயலில் இவரைப் பார்த்துள்ளார். அவரைப் பார்த்தவுடன் சில ஃபோட்டோக்களை எடுத்துக்கொண்டு ஷரீக், அவரிடம் ’நீங்கள் நடிகர் விநாயகனைப் போலவே இருக்கிறீர்கள். அதனால் புகைப்படங்கள் எடுத்தேன்’ என்று கூறியுள்ளார்.
பின்னர் அந்தப் புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோவுக்கு மக்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு. இது நடந்து ஒரு வாரம் ஆகிறது. இந்நிலையில்தான் ஷரீக் தனது ஆடையகத்திற்காக விளம்பர மாடலைத் தேடினார். ஒரு வார இடைவெளியில் எத்தனையோ பேரை பார்த்தாலும் அவருக்கு திருப்தி வரவில்லை. பின்னர் மம்மிக்காவிடமே கேட்டுவிட்டார். மம்மிக்காவும் ஒப்புக்கொள்ள, அவரது கெட்டப் முழுமையாக மாற்றப்பட்டது. முடி திருத்தம், ஃபேஷியல், கோட் சூட், கூலர்ஸ் எனக் கூலாக ஐபேடுடன் லேப்டாப்புடன் மம்மிக்கா கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த வார இறுதியில் ஷரீக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மம்மிகாவின் மாடலிங் விளம்பரம் ஏராளமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் ஃபையர் இமோஜிக்களைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மம்மிக்கா அளித்த பேட்டியொன்றில், தினக்கூலி வேலைக்கு மத்தியில் இதுபோன்ற மாடலிங் வாய்ப்புகள் வந்தால் அதையும் செய்ய ஆசைப்படுவதாகக் கூறியிருக்கிறார்.