

சிம்லா: கனவை நனவாக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் சுமார் 24,000 அடி உயரத்தில் 'பாரா கிளைடிங்' சாகசம் செய்து அசத்தியுள்ளார்.
பிஹார் மாநிலம் ஜமுய் மாவட்டம், கிதர் வட்டத் துக்குட்பட்ட பத்சந்தா பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் கபில்தேவ் ராவத் (72). இவர் தனது பிள்ளைகளுடன் இமாச்சல பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்றிருந்தார். அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதியில் பாரா கிளைடிங் சாகசத்தைக் கண்ட ராவத்திடம், அதில் பங்கேற்குமாறு அவரது பிள்ளைகள் ஊக்க
மளித்தனர். தனது வயது காரணமாக தொடக்கத்தில் தயக்கம் காட்டியபோதிலும், பிள்ளைகளின் தொடர் ஆதரவும் தன்னம்பிக்கை வார்த்தைகளும் அவரை இந்தச் சாகசத்தில் ஈடுபடத் தூண்டின.
இதனைத் தொடர்ந்து, 24,000 அடி உயரத்தில் காற்றில் பறந்து சாகசம் செய்த அனுபவம் குறித்து கபில்தேவ் ராவத் நெகிழ்ச்சியுடன் கூறும்போது, “இந்த அனுபவம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் உணர்ச்சிப்பூர்வமான தருணத்தையும் தந்தது. ஒருவரது கனவை நிறைவேற்றுவதற்கு வயது ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்கு இதுவே சான்று. எனது பிள்ளைகளின் ஆதரவாலேயே எனது இந்த வாழ்நாள் கனவு நனவானது” என்றார்.
முதுமை வயதிலும் இத்தகைய அரிய சாகசத்தைச் செய்து முடித்த கபில்தேவ் ராவத்துக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.