Published : 17 Nov 2020 01:27 PM
Last Updated : 17 Nov 2020 01:27 PM

கரோனாவைவிடப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை

கரோனாவைவிடப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம். இதற்குத் தடுப்பூசிகள் கிடையாது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஜெனீவாவைச் சேர்ந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஜெகன் சாப்பகெய்ன் மெய்நிகர் கருத்தரங்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''1960களில் இருந்து உலகம் நூறுக்கும் மேற்பட்ட பேரிடர்களைச் சந்தித்துவிட்டது. இதில் பெரும்பாலானவை பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டவையே. இதனால் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இப்போது கோவிட்-19 வைரஸ் நம் கண் முன்னால் இருப்பது உண்மைதான். அது நம் குடும்பத்தை, உறவினர்களை, நண்பர்களைப் பாதிக்கிறது. இதனால் உலகம் தற்போது கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.

எனினும் தடுப்பூசி வந்த பிறகு கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், பருவநிலை மாற்றம் அப்படிப்பட்டது அல்ல. துரதிர்ஷ்டவசமாக இதற்குத் தடுப்பூசி இல்லை.

தொடர்ச்சியான வானிலை மற்றும் பருவநிலை தொடர்பான நிகழ்வுகளின் தீவிரம், சமீபகாலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2019-ல் மட்டும் உலகத்தில் 308 இயற்கையான பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 77 சதவீதம் வானிலை அல்லது பருவநிலை சம்பந்தப்பட்டவை. இதனால் 24,400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விகிதம் 1990-ல் இருந்ததைவிடத் தற்போது 35 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என்று ஜெகன் சாப்பகெய்ன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x