Last Updated : 25 Jun, 2019 10:38 AM

 

Published : 25 Jun 2019 10:38 AM
Last Updated : 25 Jun 2019 10:38 AM

வலை 3.0: வலையை வளர்த்த நிறுவனங்கள்

வலையின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, தொடக்க காலத்தில் இரண்டு நிறுவனங்கள் தனிச்சிறப்புடன் மின்னுவதைப் பார்க்கலாம். வலை அறிமுகமான காலகட்டத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும்தாம், சாமானிய மக்களை வலையை நோக்கி ஈர்த்து அதன் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன.

நெட்ஸ்கேப்பும் யாஹுவும்தாம் இந்த நிறுவனங்கள். பேஸ்புக்கையும் கூகுளையும் மட்டுமே இணையமாக அறிந்து வைத்திருக்கும் தலைமுறை, இந்த இரண்டு நிறுவனங்களையும் அந்நியமாகக் கருதலாம். என்றாலும், 90-களில் இணையத்தை நோக்கி வந்தவர்களுக்கு நுழைவுவாயிலாக இருந்து வழிகாட்டியது இந்த நிறுவனங்கள்தாம்.

டயல் அப் மோடத்தின் ரீங்காரத்துடன் 90-களில் இணையத்தை அணுகிய அனுபவத்தைப் பெற்றவர்கள் இந்த நிறுவனங்களின் பெயர்களைக் கேட்டதுமே, இவற்றின் பெருமையையும் மதிப்பையும் உணர்ந்து தங்களுக்குள் புன்னகைத்துக்கொள்வார்கள். ஏனெனில், இணையப் பயன்பாட்டுக்கு மட்டும் அல்ல, பின்னர் அலையென உருவான இணைய நிறுவனங்களுக்கும் ஒருவிதத்தில் நெட்ஸ்கேப்பும் யாஹுவும்தாம் தொடக்கப்புள்ளிகள்.

முதலில் நெட்ஸ்கேப்பின் பெருமையைப் பார்க்கலாம். ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த வலைப் பயன்பாட்டை எளிதாக்கி, முதல் வெகுஜன பிரவுசராக நிலைபெற்றிருந்த நிலையில், முதல் வர்த்தக பிரவுசராக நெட்ஸ்கேப் அறிமுகமாகி வெற்றிக்கொடி நாட்டியது. சிலிக்கான் கிராபிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய ஜிம் கிளார்க், மொசைக் குழுவில் இடம்பெற்றிருந்த மார்க் ஆண்டர்சன், சிலருடன் இணைந்து நெட்ஸ்கேப்பைத் தொடங்கினார்.

தொடக்கத்தில் நிறுவனத்தின் பெயர், மொசைக் கம்யூனிகேஷன்ஸ் என இருந்தாலும், பின்னர் நெட்ஸ்கேப் என மாற்றப்பட்டது. நெட்ஸ்கேப் நேவிகேட்டர் எனும் பெயரில் அதன் பிரவுசர் அறிமுகமானது. மொசைக் பிரவுசரின் மேம்பட்ட வடிவமாக, மேலும் பல அம்சங்கள் கொண்டதாக நெட்ஸ்கேப் அமைந்திருந்தது.

இணையத்தை அணுகுவது என்பது மிகவும் சிக்கலான அனுபவமாக இருந்த காலகட்டத்தில், அனைவருக்கும் அறிமுகமாகியிருந்த சிடி வடிவில் நெட்ஸ்கேப் பிரவுசரை நிறுவுவதும், அதன் வாயிலாக வலையில் உலாவுவதும் எளிதாக இருந்தது.

விளைவு சாமானியர்களும் இணையத்தால் ஈர்க்கப்பட்டனர். 1994-ல் அறிமுகமான, நெட்ஸ்கேப், வலையில் உலா வருவதற்கான அம்சங்களைக் கொண்டிருந்ததோடு, இமெயில், செய்தி குழுக்கள் ஆகிய வசதிகளையும் அளித்தது. மேலும், விண்டோஸ், யூனிக்ஸ்,மேக் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் செயல்படக்கூடியதாக உருவானது.

தொடக்கத்தில் நெட்ஸ்கேப் இலவசமாக அறிமுகமானது. இணையவாசிகள் பயன்படுத்திப் பார்த்த பிறகு, கட்டணம் செலுத்தலாம் எனக் கூறியது. ஆனால், நெட்ஸ்கேப்பே இணையத்துக்கான நுழைவு வாயிலாக அமைந்த நிலையில் அதன் முகப்புப் பக்கத்தில் இடம் பெறக்கூடிய தகவல்கள் மூலம் அதிக வருவாய் கிடைக்கும் எனும் புரிதலில் கட்டண முறை கைவிடப்பட்டது.

நெட்ஸ்கேப் பிரவுசரில் நுழைந்தால், அதிலேயே இணையத்தின் பெரும்பாலான சேவைகளைப் பயன்படுத்த முடிந்தது. நெட்ஸ்கேப் பொதுமக்கள் மத்தியில் இணையம் எனும் அற்புதத்தைக் கொண்டுவந்துசேர்த்தது.

(வலை வீசுவோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x