Last Updated : 14 May, 2019 10:52 AM

 

Published : 14 May 2019 10:52 AM
Last Updated : 14 May 2019 10:52 AM

வலை 3.0: கணினி பிதாமகனும் முதல் பிரவுசரும்

வலையின் உருவாக்கம் இணையத்தை மாற்றி அமைத்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1980-களின் இறுதியில் வலை போன்ற ஒரு சேவை இணைய கட்டமைப்பின் மீது உருவாக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருந்தன. ஆனால், வலையின் பிறப்பிடமாக சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆய்வுக்கூடம் அமைந்ததுதான் எதிர்பாராதது.

செர்ன் ஆய்வுக்கூடத்தில் நுண் துகள் இயற்பியல் தொடர்பான ஆய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானிகள் அங்கு திரண்டிருந்தனர்.

அவர்கள் அணுவுக்குள் நிகழும் சிக்கலான நுண் துகள் இயக்கம் தொடர்பான சிக்கலான செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். (பின்னாளில் கடவுள் துகள் கண்டறியப்பட்டது இந்த ஆய்வுக்கூடத்தில்தான்). எல்லோரும் அணுவுக்குள் மூழ்கியிருந்த இந்த ஆய்வுக்கூடத்தில்தான், வலை சேவைக்கான யோசனை முன்வைக்கப்பட்டு செயல்வடிவமும் பெற்றது.

லீ-யின் ஆய்வு

ஆனால், விஞ்ஞானிகள் நிறைந்த சூழலே வலையை உருவாக்குவதற்கான எண்ணத்தை டிம் பெர்னர்ஸ் லீக்கு உண்டாகியது. செர்ன் ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஆய்வுக்கூடம் பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாகவும் இருந்தது. இந்தப் பிரிவுகளுக்கு ஆய்வுக்காக வரும் விஞ்ஞானிகள் தங்களுடன் சொந்த கணினிகளையும் எடுத்துவருவார்கள். அவற்றை ஆய்வுக்கூட கணினி அமைப்புடன் இணைத்து செயல்படுத்துவது டிம் பெர்னர்ஸ் லீயின் பொறுப்பாக இருந்தது.

விஞ்ஞானிகளையும் அவர்கள் பயன்படுத்தும் கணினிகளையும் எளிதாக நினைவில் கொள்ள ‘என்கொயர்’ எனும் பெயரில் ஒரு புரோகிராமை லீ எழுதி பயன்படுத்தினார். இந்த புரோகிராம் கணினி தகவல்களை இணைக்கும் ‘ஹைபர்டெக்ஸ்ட்’ அடிப்படையில் செயல்பட்டது. இடையே லீ, செர்ன் ஆய்வுக்கூடத்திலிருந்து விலகி வேறு ஒரு அமைப்பில் பணியாற்றிவிட்டு,

1984-ல் மீண்டும் செர்ன் ஆய்வுக்கூடத்துக்கு திரும்பினார். மீண்டும் விஞ்ஞானிகளுடன் பழகத் தொடங்கிய நிலையில், கணினிகள் இணைப்பு மற்றும் அவற்றுக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்வதில் உள்ள பிரச்சினைகளை முழுவதும் உணர்ந்திருந்தார். இதற்கு தீர்வு ஒன்றை உருவாக்க விரும்பினார்.

பிரிந்துகிடந்த தகவல்கள்

கணினிகள் ஒன்றுக்கு ஒன்று நேரடியாகப் பேசிக்கொண்டு, தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார். “அந்தக் காலத்தில் வெவ்வேறு கணினிகளில் வெவ்வேறு தகவல்கள் இருந்தன. அவற்றைப் பெற ஒவ்வொரு கணினிக்குள் நுழைய வேண்டும். சில நேரம் இதற்காகப் புதிய புரோகிராமிங் மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பெரும்பாலான நேரங்களில் இதற்கான பதிலை விஞ்ஞானிகளிடம் நேரடியாக கேட்டுவிடும் வழக்கம் இருந்தது” என டிம் பெர்னஸ் லீ அந்தக் கால சூழல் பற்றி குறிப்பிடுகிறார்.

இதற்கு மாறாக, ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினியில் உள்ள தகவலை எளிதாக எடுத்து பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும் என அவர் நினைத்துப்பார்த்தார். வெவ்வேறு கணினிகளை இணைக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதோடு, விஞ்ஞானிகள் செர்ன் ஆய்வுக்கூடத்திலிருந்து தங்கள் நாட்டுக்கு சென்றுவிட்டாலும்கூட, அங்கிருந்தே இங்குள்ள தகவல்களை அணுகி ஆய்வு மேற்கொள்வது சாத்தியம் என நினைத்தார். இப்படி விஞ்ஞானிகள் எங்கே இருந்தாலும் தங்களுக்குள் ஆய்வு தகவல்களை எளிதாகப் பரிமாறிக்கொள்ள ஒரு வழி தேவை என தீர்மானமாக நம்பினார் லீ.

(வலை வீசுவோம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு:

enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x