Last Updated : 26 Oct, 2018 10:48 AM

 

Published : 26 Oct 2018 10:48 AM
Last Updated : 26 Oct 2018 10:48 AM

புதிய நட்சத்திரம்: பிரித்வி ஒரு பிறவி கிரிக்கெட்டர்

பிரித்வி ஷா. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் புதிய கொண்டாட்ட நாயகன். பிரித்வி ஷாவைப் பார்க்கும்போது பதின் பருவத்தில் சச்சின் டெண்டுல்கர் விளையாடியதைப் பார்த்ததுபோல இருப்பதாகச் சிலாகிக்கிறார்கள் சச்சின் ரசிகர்கள். வீரேந்திர சேவாக்கின் நகலாகத் தெரிவதாகப் புகழ் மாலை சூட்டுகிறார்கள் சேவாக் ரசிகர்கள். “பதினெட்டு வயதில் பிரித்வி ஷாவுக்கு இருக்கும் திறமையில் 10 சதவீதத் திறமையைக்கூட நாங்கள் பெற்றிருந்தில்லை” என்று பிரித்வியை உச்சிமுகர்கிறார் கேப்டன் விராட் கோலி.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதம் என 239 ரன் குவித்து தொடர் நாயகன் விருது பெற்று அசத்தியிருக்கும் பிரித்வி ஷா, சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கான முன்னுரையை வெற்றியோடு எழுதத் தொடங்கியிருக்கிறார். அவரைப் பற்றிய முத்தான பத்துத் தகவல்கள்:

# பிரித்வி ஷா இந்தியாவின் 293-வது டெஸ்ட் ஆட்டக்காரர். 18 வயதான அவர், இந்தியாவின் 13-வது இள வயது ஆட்டக்காரர்.

# மும்பைக்கு அருகே விரார் என்ற சிறு நகரைச் சேர்ந்தவர். இவருக்கு நான்கு வயதானபோது அவருடைய அம்மாவை இழந்தவர். அவரது தந்தையால் வளர்க்கப்பட்டவர். சிறு வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்ட பிரித்வி ஷா, பயிற்சிக்காக விராரிலிருந்து சர்ச்கேட் செல்ல தினமும் இரண்டு மணி நேரம் பயணித்தவர்.

# 2010-ம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் நிலேஷ் குல்கர்னி நடத்திய விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தின் மூலம் 3 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை பெற்றவர். அப்போது அவருக்கு 11 வயது.

# 2012-ல் இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள சீட்லி ஹல்மி பள்ளிக்கூடத்துக்காக விளையாட பிரித்வி அழைக்கப்பட்டார். தொடக்கப் போட்டியில் சதம் அடித்ததோடு இரண்டு மாதங்கள் நடந்த கிரிக்கெட் போட்டியில் 1,446 ரன்கள் குவித்து இங்கிலாந்தில் கவனம் பெற்றார் பிரித்வி.

# 2013-ம் ஆண்டில் மும்பையில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் களமிறங்கிய பிரித்வி ஷா, 300 பந்துகளில் 546 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தார்.

# 2017-ல் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார் பிரித்வி. ரஞ்சிப் போட்டியில் மும்பை அணிக்காகக் களமிறங்கிய இவர், அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக 120 ரன் குவித்து மும்பை அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

9 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 5 சதங்கள் விளாசியது இவரது சாதனை மகுடத்தில் ஒரு மைல்கல்.

l  துலீப் கோப்பை அறிமுகப் போட்டியில் பிரித்வி சதம் அடித்ததன் மூலம், இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்று சச்சின் வைத்திருந்த சாதனையை பிரித்வி கைப்பற்றினார்.

# 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிரித்வி ஷா தலைமையில் 2017 உலகக் கோப்பையை  இந்தியா வென்றது. உலகக் கோப்பையில் 261 (சராசரி 65.24) ரன்கள் விளாசி, கேப்டனாக அதிக ரன் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

# 2018-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணிக்காக 1.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார் பிரித்வி. 9 போட்டிகளில் பங்கேற்று 245 ரன்கள் விளாசினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 152.12. ஐபிஎல் கிரிக்கெட்டில் இளம் வயதில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய முதல் வீரர் என்ற பெருமையும் பிரித்விக்குக் கிடைத்தது.

# இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்த பிரித்வி ஷா, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ (2 சதங்கள்), லேசெஸ்டர்ஷயர் ‘ஏ’, தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு எதிராக தலா ஒரு சதம் என 4 சதங்களை விளாசியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x