16 வயதில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்: உலக அழகி ஓபல் சுச்சாதா தகவல்

16 வயதில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்: உலக அழகி ஓபல் சுச்சாதா தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: உலக அழகி பட்டம் வென்ற ஓபல் சுச்சாதா, 16 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி கடந்த மே 7-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியாவின் நந்தினி குப்தா உட்பட 108 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் தாய்லாந்தின் ஓபல் சுச்சாதா சுவாங்ஸ்ரீ உலக அழகியாக தேர்வானார். ஓபல் மலர் போன்ற வெள்ளை நிற கவுன் அணிந்திருந்த அவருக்கு கடந்த ஆண்டின் உலக அழகியும் செசன்யாவைச் சேர்ந்தவருமான கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடம் அணிவித்தார். இதன்மூலம் உலக அழகி பட்டம் பெற்ற முதல் தாய்லாந்து பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஓபல்.

எத்தியோப்பியாவின் ஹாசெட் டெரிஜி 2-ம் இடமும், போலந்தின் மஜா க்ளாஜ்தா 3-ம் இடமும், மார்ட்டினிக் நாட்டின் அவுர்லி ஜோச்சிம் 4-ம் இடமும் பிடித்தனர். இந்தியா சார்பில் இப்போட்டியில் பங்கேற்ற நந்தினி குப்தா முதல் 20 பேரில் ஒருவராக தேர்வானார். எனினும் முதல் 8 பேர் குழுவுக்கு அவர் தேர்வாகவில்லை.

இதுகுறித்து ஓபல் சுச்சாதா கூறும்போது, “உலக அழகி பட்டம் வென்ற முதல் தாய்லாந்து பெண்ணாக தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்திய இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி.

16 வயதில் எனக்கு மார்பக புற்று நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்போது நான் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்” என்றார்.

விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட ஓபல், 16 பூனைகள் மற்றும் 3 நாய்களை வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in