Published : 09 May 2025 08:26 PM
Last Updated : 09 May 2025 08:26 PM
பொள்ளாச்சி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் 14-ம் லியோ கடந்த 2006-ம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வருகை தந்துள்ளார். இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் . அவரது உடல் அடக்கம் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் வந்தன. நேற்று புதிய போப் தேர்வானதை குறிக்கும் வகையில் வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தின் புகை போக்கியிலிருந்து வெண்புகை வெளியேற்றப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துவதற்கான 267-வது போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பெர்வோஸ்ட் (69) தேர்வு செய்யப்பட்டார். 14-ம் லியோ ஆன இவர் கடந்த 2006-ம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியில் தொடங்கப்பட்ட, செண்பகம் பள்ளிக்கு ஆய்வுக்காக வந்துள்ளார். அகஸ்டினியன் சபையால் நிர்வகிக்கப்படும் பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து அப்பள்ளியின் அருட்தந்தையாக பணியாற்றும் சுமேஷ் ஜோசப் கூறும்போது “பெரும்பாலான போப்புகள் இந்தியா பற்றி அறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் தற்போது போப் ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கும் 14-ம் லியோ கடந்த காலத்தில் தமிழகத்தில் பொள்ளாச்சி பகுதிக்கு வந்திருந்தது. இப்பகுதியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு பெருமையாக உள்ளது. பொள்ளாச்சி பகுதிக்கு வந்தபோது, தமிழர்களைப் பற்றி அவர் அறிந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT