ராமேசுவரம் - சென்னை: 400 கடல் மைல் தூரத்தை நீந்தி கடக்கும் 15 மாற்றுத் திறனாளிகள்!

ராமேசுவரம் - சென்னை: 400 கடல் மைல் தூரத்தை நீந்தி கடக்கும் 15 மாற்றுத் திறனாளிகள்!

Published on

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்கரையிலிருந்து சென்னை மெரினா கடற்கரை வரையிலுமான 400 கடல் மைல் தொலைவினை நீந்தி கடக்கும் சாதனை முயற்சியை 15 மாற்றுத் திறனாளிகள் இன்று துவங்கினர்.

சென்னை செனாய் நகரில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் அபினவ் காஞ்சி (15), கணேஷ் (18), ஹரிஷ் பரத்மோகன் (16), ஜோசுவா ஆபிரகாம் இம்மானுவேல் (13), லக்ஷய் குமார் (18), லக்ஷய் கிருஷ்ணகுமார் (13), லிதீஷ் கிருஷ்ணா (13), மோகன் ராஜ் (21), நந்திகா (14), ரித்திஷ் (16), ரோஷன்ராஜ் லெனின் (19), சித்தார்த் (10) ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ் (31), தேஜஸ் (16), விஷால் மாதவ் (19) ஆகிய 15 மாற்றுத் திறனாளிகள் (மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள்) நீச்சல் பயிற்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த 15 பேரும் ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்கரையிலிருந்து சென்னை மெரினா வரையிலுமான (400 கடல் மைல் தொலைவு) தொடர் நீச்சல் பயணத்தை நேற்று காலை துவங்கினர். வேவ் ரைடர்ஸ் விளையாட்டு குழு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோர் இணைந்து நடத்தும் தொடர் நீச்சல் பயணத்தை மண்டபம் கடற்கரையில் தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் அன்பழகன் திங்கட்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அப்பாஸ், பாரா டேபிள் டென்னிஸ் குழு தலைவர் தமிழ்செல்வி, தமிழ்நாடு மீனவர் பேரவை ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரின்சோ ரைமண்ட் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் துணை தலைவர் தாஜ்தீன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர் லோகநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரிலே முறையில் நடைபெறும் இந்த தொடர் நிச்சல் பயணத்தில் ஒருவர் மாறி ஒருவராக நீந்துவார்கள். நேற்று மண்டபத்திலிருந்து துவங்கி தொண்டி, காட்டுமாவடி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பழையாறு, பரங்கிபேட்டை, புதுச்சேரி, மரக்காணம், மகாபலிபுரம், ஈச்சம்பாக்கம் வழியாக ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தன்று சென்னை மெரினா கடற்கரையை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in