

கட்சிரோலி: சாலை வசதி இல்லாததன் காரணமாக, காயமுற்ற தந்தையை கட்டிலில் தூக்கியபடி 14 கி.மீ.நடந்து சென்று மகன் மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் உள்ள பழங்குடி கிராமம் பட்பர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த மல்லு மாஜ்ஜி (67) வியாழக்கிழமை தன் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமானது. ஆனால்,மருத்துவமனை அந்த கிராமத்திலிருந்து 14 கிமீ தொலைவில் இருந்தது. அந்த கிராமத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல எந்த வசதியும் கிடையாது. நடந்துதான் செல்ல வேண்டும். தவிர, இடையே வரும் ஆற்றையும் கடந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில், மகன் புசு மாஜ்ஜி காயமுற்ற தன் தந்தையை காப்பாற்ற அவரை கட்டிலில் படுக்க வைத்து, தன் நண்பருடன் இணைந்து கட்டிலை தோளில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தார். இடையே வந்த ஆற்றையும் அதேபோல் கடந்து சென்று மருத்துவமனையை அடைந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நலம் தேறியது. அதன்பிறகு, மீண்டும் அவரை கட்டிலில் சுமந்தபடி 14 கிமீ நடந்து வீட்டுக்கு வந்தடைந்தனர்.