Last Updated : 09 Feb, 2018 12:14 PM

 

Published : 09 Feb 2018 12:14 PM
Last Updated : 09 Feb 2018 12:14 PM

காதல் செய்வோம்: 40 நாடுகளில் ஒரு காதல் சுற்றுலா!

வா

ழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதற்கு ஓர் உதாரணமாகியிருக்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த ஷ்யாம் - அன்யா தம்பதி. ஷ்யாம் இந்தியர்; அன்யா உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். காதலர்களான இவர்கள் தம்பதியான பிறகு எல்லோரையும்போல் வீடு, வேலை என்று டெல்லியில் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். விடுமுறை நாட்களில் பல நாடுகளுக்குப் பயணம் சென்றாலும், பணி நிமித்தமாக மீண்டும் அவர்கள் டெல்லிக்குத்தான் வந்தார்கள். ஆனால், அவர்கள் மனம் எப்போதும் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான வாழ்க்கையை விரும்பவில்லை.

விளைவு, இருவரும் உலகம் முழுவதும் 40 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுத்தார்கள். ஆனால், அவர்களின் முந்தைய பயணத்துக்கும் இந்த லட்சியப் பயணத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அவர்கள் செல்லும் நாடுகளைச் சுற்றிப் பார்த்த பின்னர், அங்கிருக்கும் நினைவுச் சின்னம், பிரபலமான இடத்தில் முத்தமிட்டபடியே ஒளிப்படம் எடுத்துக்கொள்வது என முடிவெடுத்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று ஷ்யாம் - அன்யா தம்பதியின் லட்சியப் பயணம் டெல்லியிலிருந்து தொடங்கியது. பாஸ்போர்ட்களின் பின்னணியில் முத்தமிட்டுக் கொள்ளும் ஒளிப்படத்துடன் பயணத்தைத் தொடங்கினர். அங்கிருந்து சிங்கப்பூர், இந்தோனேசியா, ஜப்பான், சீனா, மங்கோலியா என்று உலகை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். தற்போது வியட்நாமில் இருக்கிறார்கள். புதிய இடங்களுக்குச் செல்ல வேண்டும், உலகின் வெவ்வேறு இன மக்களுடன் பழக வேண்டும், தரமான உணவைச் சாப்பிட வேண்டும், ஒரே இடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடக் கூடாது என்பது மட்டுமே இந்தத் தம்பதியின் தாரக மந்திரமாக இருந்தது.

40 நாடுகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் டெல்லிக்குத்தான் திரும்ப வேண்டும் என்றாலும், இந்த லட்சியப் பயணம் அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அத்தியாயமாக அமையும் என்பது நிச்சயம். உலகப் பிரசித்தி பெற்ற இடங்களில் முத்தமிட்டுக்கொள்வது இந்தத் தம்பதிக்குச் சாதாரணமாக இருந்தாலும், அங்கிருக்கும் மத நம்பிக்கை, மக்களை எந்த வகையிலும் மனதளவில் புண்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சென்ற இடங்களில் இவர்களுக்குச் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

உதாரணமாக, சிங்கப்பூர் என்றாலே சிங்கத்தின் தலையில் இருந்து கொட்டும் தண்ணீர் வரும் இடம்தான் ஞாபகத்துக்கு வரும். அங்கு நின்றுகொண்டு துரியன் பழத்தை கையில் ஏந்தியபடி இந்த ஜோடி முத்தமிட்டுக்கொண்டது. மருத்துவக் குணம் கொண்ட துரியன் பழம், மிகவும் வாடை வீசும். ஆனால், சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் 500 டாலர் அபராதம் விதிக்கப்படும். எனவே, அங்கிருக்கும் ஒரு பழக்கடையில் துரியன் பழத்தை வாங்கிய இந்த ஜோடி, அதனை மிகவும் கவனமாக பாலித்தீன் பையில் போட்டு லட்சிய ஒளிப்படத்தை எடுத்துக்கொண்டது.

பழமையும் புதுமையும் இரண்டறக் கலந்த ஷாங்காய் நகரில் ஒரு வானுயர்ந்த கட்டடத்தின் மீது அமர்ந்திருந்தபோது, கண்கள் முன்பாக தெரிந்த காட்சியை ஒரு பாரம்பரிய விசிறியில் ஓவியமாக வரைந்தது ஷ்யாம் - அன்யா தம்பதி. பின்னர், அதே இடத்தில் நின்றுகொண்டு அந்த விசிறிக்கு பின்பாக முத்தமிட்டுக் கொண்டு தங்கள் நினைவுகளைப் பத்திரப்படுத்தினர்.

இதேபோல் டோக்கியோவில் ஷிபுயா, மங்கோலியாவில் கோபி பாலைவனம் எனப் பல இடங்களில் முத்த ஒளிப்படங்களை எடுத்துள்ளனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் இவர்கள் உலகப் பயணத்தை நிறைவு செய்யப்போகிறார்கள். அதுவரை உலகின் ஒவ்வொரு நாட்டிலும் முத்தமிடப்படி தங்கள் நினைவுகளை இவர்கள் ஒளிப்படமாகத் சுட்டுத்தள்ளவும் போகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x