

புதுச்சேரி: பிரான்ஸ் இளைஞருடன் இந்தியப் பெண்ணுக்கு புதுச்சேரியில் தமிழ்முறைப்படி திருமணம் நடந்தது.அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் பிரான்ஸ் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அத்துடன்வாழை இலையில் விருந்தளிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சைலீவ்-பாலின் ஜோடிக்கு பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் வித்தியாசமான முறையில் மாப்பிள்ளை அழைப்பும் தமிழர் முறைப்படி திருமணமும் நடைபெற்றது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் பிரான்ஸ் மாப்பிள்ளை அழைத்து வரப்பட்டார். இதை வெகுவாக விரும்பிய பிரான்ஸ் மாப்பிள்ளை ஆனந்தமாக நடனம் ஆடியபடி சொகுசு விடுதியில் ஊர்வலமாக வந்தார் தமிழர் முறையில் மாலை மாற்றிக் கொண்டு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
மணமகள் இந்தியாவில் பிறந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர், பிரான்ஸில் தனது குடும்பத்தோடு குடியேறி உள்ளனர். அதன் காரணமாக தமிழர் முறையில் திருமணம் செய்து கொண்ட பிறகு, இரு வீட்டாரும் மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விருந்தாக மதியம் வாழை இலையில் விருந்து உபசரிப்பு நடந்தது.
வெளி நாட்டினர் கரண்டி இல்லாமல் கைகளால் விருந்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர். அதே மணமக்கள் மறுநாள் மாலையில் பிரான்ஸ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அன்று இரவு பிரான்ஸ் முறைப்படி விருந்து உபசரிப்பு நடந்தது.