

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா நகரில் உள்ள முதப்பார் பகுதியைசேர்ந்தவர் செத் யாதவ். இவரது மகள் நீலிமா உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றுகிறார். நீலிமாவுக்கும் சாரங்கர்-பிலைகர் மாவட்டத்தை சேர்ந்த கம்மன் யாதவ் என்பவருக்கும் கடந்த திங்கட்கிழமை திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்திற்கு மோட் டார் சைக்கிளில் வந்த விருந் தினர்களுக்கு வழக்கத்துக்கு மாறான ஒரு பரிசுப் பொருள் காத்திருந்தது. இவர்களுக்கு மணமகளின் தந்தை ஹெல்மெட் வழங்கி, அவர்களை வியப்பில் ஆழ்த்தினார். மேலும் திருமண விழாவில் மணமகள் குடும்பத்தினர் ஹெல்மெட் அணிந்து நடனம் ஆடி விருந்தினர்களை உற்சாகப்படுத்தினர்.
விழிப்புணர்வுக்காக.. இதுகுறித்து செத் யாதவ் கூறும்போது, “சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எனது மகளின் திருமணத்தை சிறந்த சந்தர்ப்பமாக கருதினேன். விருந்தினர்களிடம் உயிர் விலைமதிப்பற்றது என்று கூறினேன். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துக்கள் அதிகம்நிகழ்கின்றன. எனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். திருமணத்தின்போது ஹெல்மெட் அணிந்து நடனமாட எனது குடும்பத்தினர் முடிவு செய்தனர். விருந்தினர்களுக்கு இனிப்புடன் சுமார் 60 ஹெல்மெட்களை விநியோகம் செய்துள்ளேன்” என்றார்.