கும்பகோணம் பஞ்சவன்மாதேவி கோயிலில் பழங்கால கிணற்றின் சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு

கும்பகோணம் பஞ்சவன்மாதேவி கோயிலில் பழங்கால கிணற்றின் சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு
Updated on
2 min read

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் மங்களநாயகி சமேத ராமலிஙகசுவாமி கோயில் எனும் பட்டீஸ்வரம் பஞ்சவன்மாதேவி கோயிலில் பழங்காலத்துக் கிணற்றின் சுற்றுச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பட்டீஸ்வரம், முந்தாலம்மன் கோயில் தெருவில் உள்ள மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். இக்கோயில் ராஜராஜனின் 5-வது மனைவியான பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளி படைகோயிலாகும். இந்த பஞ்சவன்மாதேவி திருச்சி மாவட்டம் உடையார்குடி வட்டத்தில் உள்ள பழுவூரில் பிறந்தவர். இந்த பஞ்சவன்மாதேவி தளிசோி பெண்ணான இவர் ஆடல், பாடல், கலை மற்றும் போர்த் திறனிலும் சிறந்து விளங்கியுள்ளார். இதனால் ராஜராஜசோழனின் உள்ளம் கவர்ந்து அன்பு மனைவியாக இருந்துள்ளார்.

ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் மீது மிகுந்த பாசம் கொண்டு தனது சொந்த மகனாக வளர்த்து வந்ததால், எங்கே தனக்குக் குழந்தைகள் பிறந்தால் ஆட்சி பீடத்திற்குப் போட்டிக்கு வந்துவிடுவார்களோ என, தனக்கு குழந்தை பிறக்கக் கூடாது என்று மூலிகை மருந்து குடித்து தன்னை மலடாக்கிக் கொண்டார் எனக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தியாகத்தை செய்த பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னையின் நினைவாக அமைக்கப்பட்டது தான் இந்த மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோயிலாகும்.

சிறப்புப் பெற்ற இந்தக் கோயிலில், காலை பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த தொன்மை பாதுகாப்பு மன்றம், சாரணர் இயக்கம் மற்றும் தேசிய பசுமைப்படை இயக்கத்தைச் சேர்ந்த 54 மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியை கி.ஹேம லதா, ஆசிரியர்கள் ச.முத்துக்குமாரசாமி, என்.வினோத் குமார், பி.சிவராம கிருஷ்ணன் ஆகியோர், தொன்மையான இந்தக் கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ளச் சென்றனர். தொடர்ந்து, அந்தக் கோயிலைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்தக் கோயிலின் வலது புறத்தில் சுமார் 5 மீட்டர் சுற்றளவு கொண்ட பழங்காலத்து கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கிணற்றின் மேற்புற சுற்று சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஒரு அடி ஆழத்திற்கு தோண்டிப் பார்த்தபோது, கிணறு இருப்பதற்கான தடம் தெரிய வந்தது. இதனையடுத்து நேரில் ஆய்வு செய்த பட்டீஸ்வரம் கோயில் புலவர் சி.செல்வசேகரன் மற்றும் பணியாளர்களுக்கு, கிணற்றை விரைவில் தோண்டி எடுக்கப்படும் என கூறினர். இதனிடையே, அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள், பழங்காலத்து கிணற்றின் மேற்புற சுற்றுச் சுவரை ஆர்வமுடன் கண்டுசெல்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in