வழக்கொழிந்து போன மரபு வழி விளையாட்டுகளை மீட்டெடுக்கும் அரசுப்பள்ளி

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் நடைபெற்ற மரபு விளையாட்டு போட்டியில் டயர் வண்டி ஓட்டி மகிழ்ச்சி அடைந்த மாணவிகள்.
பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் நடைபெற்ற மரபு விளையாட்டு போட்டியில் டயர் வண்டி ஓட்டி மகிழ்ச்சி அடைந்த மாணவிகள்.
Updated on
1 min read

பொள்ளாச்சி: கடந்த தலைமுறையால் விரும்பி விளையாடப்பட்டுவந்த பல்லாங்குழி, கண்ணாமூச்சி, ராஜா ராணி, பரமபதம், பம்பரம் உள்ளிட்ட தமிழ் மரபு விளையாட்டுகள் நாகரிக வளர்ச்சியால் வழக்கொழிந்து வருகின்றன. அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த எட்டு ஆண்டுகளாக அரசு பள்ளி ஈடுபட்டு வருகிறது. கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை தற்போதைய தலைமுறை புறக்கணித்துவிட்டு, உடல் உழைப்பே இல்லாத ‘ஆன்லைன்' விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கிறது.

கடந்த காலங்களில் மாலை நேரங்களில் ஓடி, ஆடி விளையாடியதால், உடல் உழைப்பு இருந்தது. அதனால், குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு குறைந்து காணப்பட்டது. ஆனால், கணினி வளர்ச்சி, குழந்தைகளை நான்கு சுவருக்குள் முடக்கிவிட்டதால், அவர்களின் உடல் ஆரோக்கியம் இன்று குறைந்து காணப்படுகிறது. இதனால், உடலுக்கு வலுவையும் மனதுக்கு மகிழ்வையும் தரும் மரபு விளையாட்டுகளை மாணவ, மாணவியர் மத்தியில் கொண்டு செல்லும் தேவை அதிகரித்துள்ளது.

மரபு விளையாட்டு போட்டியில் பச்சகுதிரை தாண்டி மகிழும் மாணவர்கள்.
மரபு விளையாட்டு போட்டியில் பச்சகுதிரை தாண்டி மகிழும் மாணவர்கள்.

பொள்ளாச்சியை அடுத்த பெத்த நாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆண்டுதோறும் தமிழ் மரபு விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர். 8-ம் ஆண்டாக மரபு விளையாட்டு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. காலையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னர், பறை இசை, ஒயிலாட்டம், காவடி ஆட்டம், கும்மியாட்டம், வள்ளி கும்மி ஆகியவற்றுடன் தொடங்கிய இந்த விளையாட்டு விழாவில், பம்பரம், கண்ணாமூச்சி, கயிறு இழுத்தல், பாண்டியன் குழி, தாயம், பூச்சூடவா, சம்பா, ஓட்டங்கரம், கில்லி, டயர் வண்டி ஓட்டுதல், பச்சக்குதிரை, நொண்டி அடித்தல் உள்ளிட்ட மரபு விளையாட்டுகளை, மாணவ, மாணவிகள் உற்சாகமாக விளையாடினர்.

இதுகுறித்து பள்ளியின் தமிழ் ஆசிரியர் பாலமுருகன் கூறும்போது, “கடந்த 7 ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் மரபு விளையாட்டு திருவிழாவை நடத்தி வருகிறோம். 8-ம் ஆண்டு மரபு விளையாட்டு திருவிழா தற்போது நடத்தப்பட்டது. மரபு விளையாட்டுகள் கற்பனைத் திறன், சிந்திக்கும் ஆற்றல், ஞாபக சக்தி அதிகரித்தல் ஆகியவற்றுக்கு உதவுகின்றன. இந்த விளையாட்டுகள் மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in