Published : 26 Jan 2024 05:15 PM
Last Updated : 26 Jan 2024 05:15 PM

வாசிக்கலாம் வாங்க: புல்வயல் கிராமத்தில் ஊர்கூடி திறக்கப்பட்ட நூலகம்

நூல்களை ஆர்வத்துடன் வாசிக்கும் மாணவர்கள்.

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே கஜா புயலால் அரசின் ஊர்ப்புற நூலகம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், புதிய நூலகம் கட்டப்படாததால் ஊர்கூடி புதிதாக தனியார் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே புல்வயல் கிராமத்தில் 3,500 பேர் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் அரசின் ஊர்ப்புற நூலகம் ஒன்று இருந்தது.

2018-ல் வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தால், இந்நூலகத்தின் கட்டிடம், அங்கிருந்த புத்தகங்கள் என அனைத்தும் சேதமடைந்துவிட்டன.அதன்பிறகு, அந்த ஊர்ப்புற நூலகம் புதுப்பிக்கப்படவில்லை. புதிய நூலகமும் கட்டப்படவில்லை. இதனால், மாவட்டத்தில் நூலகம் இல்லாத கிராமமாக புல்வயல் மாறியது.

பொதுமக்கள், மாணவர்கள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வோர் என அனைத்து தரப்பினரும் நெடுந்தொலைவில் உள்ள புதுக்கோட்டை, அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நூல்களை வாசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து நூலகத் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன், எழுத்தாளர் சோலச்சி, புல்வயலைச் சேர்ந்த சுப்பையா ஆகியோரின் ஒருங்கிணைப்பில், புல்வயல் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரை உள்ளடக்கி, புதிதாக ஒரு நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய நூலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு
நூல்களை பரிசளித்த கவிஞர் தங்கம்மூர்த்தி.

வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் முதல்கட்டமாக 1,000 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வாசகர் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக இருக்கைகள், புத்தகங்களை அடுக்குவதற்கு அலமாரிகள், மின்விசிறிகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் திறக்கப்பட்ட இந்த நூலகத்தில் தினசரி வாசகர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர் என ஏராளமானோர் வரத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ராமகிருஷ்ணன் கூறியது: ஊருக்கு நூலகம் அவசியம். கஜா புயலால் நூலகம் சேதம் அடைந்துவிட்டதால் புதிய நூலகத்தை கட்டித் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுவரை பொதுமக்கள் ஒத்துழைப்புடன், ‘புல்வயல் ஊராட்சி உறவுகள்’ எனும் புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

1,000 புத்தகங்களுடன் திறக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் தினசரி வாசகர்கள் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். நூலகத்துக்கான மாதாந்திர வாடகை ரூ.1,500, பணியாளர் மாதச் சம்பளம் ரூ.3,000 ஆகியவற்றை ஏற்றுக்கொண்டுள்ளோம். கொடையாளர்கள் உதவியுடன் நூலகம் மேம்படுத்தப்படும். அரசு நூலகம் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x