Published : 23 Dec 2023 08:24 PM
Last Updated : 23 Dec 2023 08:24 PM

விளிம்புநிலை மக்களுக்கு விழிப்புணர்வுடன் சமூக சேவை: மதுரை பெண்ணுக்கு டெல்லியில் விருது

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விருது பெறும் வெரோனிகாமேரி.

மதுரை: குடும்பச் செலவை மிச்சப்படுத்தி அந்தப் பணத்தில் தென் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சுகாதார உரிமைக்காக போராடிய, மதுரை பெண் சமூக ஆர்வலருக்கு டெல்லியில் ‘மனித உரிமை பாதுகாவலர் விருது’ கிடைத்துள்ளது. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் சர்வதேச அமைப்பான ‘ஆக்சன் எய்ட்’ தன்னார்வ அமைப்பு ஆண்டு தோறும் டிச.10-ம் தேதி உலக மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுகிறது.

இதையொட்டி தேசிய அளவில் தன்னலம் கருதாது சமூக நலத்துக்காகச் சேவை யாற்றும் சிறந்த தன்னார்வ சமூக செயற்பாட்டாளர்களைத் தேர்வு செய்து ‘மனித உரிமைப் பாதுகாவலர் விருது’ வழங்கு கிறது. இந்தாண்டு புது டெல்லி யில் கடந்த 18-ம் தேதி விருது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. தமிழகத்திலிருந்து மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சுகாதார உரிமை பெண் சமூகச் செயற்பாட்டாளர் ஏ. வெரோனிகா மேரி தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய பெண்கள் ஆணை யத்தின் உறுப்பினர் ப்ரீதி பரத்வாஜ். தமிழ்நாடு பெண்கள் ஆணையத் தலைவி ஏ.எஸ் குமாரி ஆகியோர் விருது வழங்கினர்.

தேசிய அளவில் பல்வேறு மாவட்டங் களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட தன்னார்வ சமூக ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சமூக ஆவர்லர் ஏ. வெரோனிகா மேரி. (36) ஏழை மற்றும் விளிம்புநிலைப் பெண்களுக்கு இலவசமாக, தரமான சிகிச்சை மற்றும் அரசின் மருத்துவ நலத்திட்டங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். 15 ஆண்டுகளுக்கு மேலாக சாமானியப் பெண்ணாக சமூக மாற்றத்துக்காகச் செயல்பட்டு வருகிறார். யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வீட்டின் குடும்பச் செலவை மிச்சப்படுத்தி, தான் சேமித்த தொகையைக் கொண்டு மதுரை மட்டுமில்லாது தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்து சமூகப்பணி ஆற்றி வருகிறார்.

அடிப்படை வசதி: சமீபத்தில் மதுரை மாவட்டம் பாரப்பத்தி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர், அருந்ததியர் பெண்கள் கழிப்பறை வசதியின்றி திறந்தவெளியைப் பயன்படுத்தியதை அறிந்து ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென் றார். இதன் விளைவாக பாரப்பத்தி கிராம ஆதிதிராவிட மக்களுக்கு தற்போது சுகாதார சமூக கழிப்பறைகள், குடிநீர் வசதி, சாக்கடை வசதி கிடைக்கச் செய்துள்ளார். இவரது முயற்சியால் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையின் மோசமான செயல் பாடுகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்டிஐ மனுக்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

தன்னார்வ வழக்கறிஞர் உதவியுடன் மதுரை உயர் நீதிமன்றத்தில் 26 முக்கியப் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்து முக்கியத் தீர்ப்புகள் மூலம் அரசு மருத்துவமனைகளில் பெண்கள், குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கக் காரணமாக இருந்துள்ளார். கிராமங்களில் பின்தங்கிய விளிம்புநிலை மக்களுக்கு(பெண்களுக்கு) அரசின் மருத்துவ திட்டங்களான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அவர்களை பயனாளிகளாக உருவாக்கியுள்ளார்.

மூன்று விருதுகள்: மருத்துவ விதிமீறல்களால் பாதிக்கப்படும் பெண் நோயாளிகளை அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆற்றுப்படுத்துகிறார். மேலும் அவர்களுக்கு சட்டரீதியாக உதவிகள் செய்வதோடு குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு எந்தப் பின்னணியும் இன்றி தனியொரு பெண்ணாக சமூகப் பணியை மேற்கொண்டு வருகிறார். இதுபோன்ற சமூக சேவைக்காக வெரோனிகா மேரி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சேவையைப் பாராட்டி இந்த ஆண்டில் (2023) மட்டும் மூன்று விருதுகள் கிடைத்துள்ளன.

இந்த விருது குறித்து அவர் கூறியதாவது: என்னுடைய சமூகப் பணியால் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள் ளேன். அதைத் தாண்டி கிடைக்கும் இந்த விருது, அதற்கு அருமருந்தாக உள்ளது. சிறந்த மன வலிமை படைத்தவர்கள் பெண்கள். அவர்கள் நினைத்தால் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை இந்த விருதுகள் உறுதி செய்து ஊக்கமளிக்கின்றன’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x