ஜல்லிக்கட்டில் மட்டுமல்ல... குத்து சண்டையிலும் அசத்தும் அலங்காநல்லூர்!

குத்துச்சண்டை விளையாட்டு மைதானம்
குத்துச்சண்டை விளையாட்டு மைதானம்
Updated on
2 min read

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குப் பிரபலமான அலங்காநல்லூரில் அரசுப்பள்ளி மாணவர்கள், குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் பதக்கங்களை வென்று அசத்துகிறார்கள்.

மாணவர்கள் பிரபலமான கிரிக்கெட், தடகளம் போன்ற விளையாட்டுகளைத் தாண்டி மற்ற போட்டிகளில் விளையாட பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், அலங்காநல்லூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், குத்துச்சண்டைப் போட்டியில் மாநில அளவில் சாதிக்கிறார்கள்.

இதுவரை ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே அறியப்பட்ட அலங்காநல்லூர், தற்போது குத்துச்சண்டை போட்டியிலும் பிரபலமடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை இந்தப் பள்ளிமாணவர்களின் குத்துச்சண்டை விளையாட்டின் சாதனைகளுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களுடைய குறும்பட வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அப்பள்ளியையும் மாணவர்களையும் பாராட்டியது.

2003-ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதல் முதலாக குத்துச்சண்டைப் போட்டியை பள்ளிகளில் அறிமுகப்படுத்தியது. அத்துடன் நீச்சல், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், ஜிம் னாஸ்டிக் போன்ற ஒலிம்பிக் விளையாட்டுகளையும் அறிமுகம் செய்தது.

மாணவர்களுக்கு பயிற்சி தரும் உடற்கல்வி ஆசிரியர்<br />காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்.
மாணவர்களுக்கு பயிற்சி தரும் உடற்கல்வி ஆசிரியர்
காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்.

குத்துச்சண்டை அறிமுகப்படுத்தப்பட்ட 2003-ம் ஆண்டிலே சென்னையில் நடந்த மாநிலப் போட்டியில் அலங்காநல்லூர் பள்ளி மாணவர்கள் தங்கம், வெண்கலம் வென்றனர். தொடர்ந்து சேலம், நாகர்கோவில், மதுரை போன்ற ஊர்களில் நடந்த போட்டிகளிலும் வென்றனர்.

மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்து, தமிழக அரசு முதல் முறையாக 2008-ல் அலங்காநல்லூர் பள்ளியில் குத்துச்சண்டை மைதானத்தை அமைத்தது. அதன் மூலம், மாணவர்களின் திறமை மேலும் மேம்பட்டு மாவட்ட, தேசிய அளவில் பதக்கங்களை குவிக்கத் தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் கூட குத்துச்சண்டைப் போட்டி மைதானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் குமார்
சந்தோஷ் குமார்

இதுகுறித்து அலங்காநல்லூர் அரசுப் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் கூறியதாவது: குத்துச்சண்டைப் போட்டி பயிற்சிக்கு ஆர்வப்படும் மாணவர்களுக்கு முதலில் பிரபல வீரரான மைக் டைசன் வீடியோக்களை போட்டுக் காட்டுவோம். அதன்மூலம், அந்த மாணவர்கள், இந்தப் போட்டியில் தொடர்ந்து விளையாடலாமா? வேண்டாமா? என்ற ஒரு முடிவுக்கு வருவார்கள்.

அந்த வீடியோக் களை பலமுறை பார்க்கும் போது குத்துச் சண்டை விளை யாட்டின் நேர்த்தி களையும், வியூகங் களையும் மாணவர்கள் கற்றுக் கொள்ளத் தொடங்குகி றார்கள். தொடர்ந்து நாங்கள் பஞ்சால் நிரப்பப்பட்டு தோல் அல்லது சிந்தடிக் உறையால் மூடப்பட்ட கையுறை, பல், உதடு மற்றும் தலையையும் காதுகளையும் பாதுகாக்க உதவும் உபகரணங்களையும் வழங்கி பயிற்சி அளிக்கிறோம்.

அலங்காநல்லூர் அரசு பள்ளி
அலங்காநல்லூர் அரசு பள்ளி

இதுதவிர, தினமும் 5 கி.மீ., ஓட்டப் பந்தயம், ‘பஞ்ச் பேக்’குகளை குத்த விடுவது போன்ற மற்ற உடற்பயிற்சிகளையும் கொடுக்கிறோம். தமிழகத்திலேயே எங்கள் பள்ளியில் மட்டுமே குத்துச்சண்டை மைதானம் உள்ளதால் தேசியப் போட்டிகளில் விளையாட மாநில அணி தேர்வு, 3 முறை எங்கள் பள்ளியில் நடந்துள்ளது. இடையில் கரோனாவால் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க முடியாமல் போனதால், விளையாட்டின் மீதான செயல்முறை 3 ஆண்டுகள் தடைப்பட்டது.

தற்போது மீண்டும் மாணவர்கள் குத்துச்சண்டையில் சாதிக்கத் தொடங்கி உள்ளனர். குத்துச்சண்டையில் சாதித்த எங்கள் பள்ளி மாணவர் கார்த்திக்ராஜா தற்போது இந்திய ராணுவத்தில் சேர்ந்து ராணுவ ஒலிம்பிக் அணி குத்துச்சண்டை வீரர்களுக்குப் பயிற்சி வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

குத்துச்சண்டை வீரரான அலங்காநல்லூர் பள்ளி மாணவர் எம்.சந்தோஷ்குமார் கூறுகையில், ‘‘10-ம் வகுப்பு முடித்துள்ளேன். நான் 6-ம் வகுப்பு படிக்கும்போது எங்கள் உடற்கல்வி ஆசிரியர் காட்வின், மாணவர்களுக்குக் குத்துச்சண்டைப் பயிற்சி வழங்குவார்.

வேடிக்கை பார்க்கச் சென்றபோது, எனக்கும் குத்துச்சண்டைப் போட்டி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் காட்வினிடம் என்னுடைய ஆசையைத் தெரிவித்தேன். என்னை தட்டிக் கொடுத்துச் சேர்த்துக் கொண்டார். அவரது ஊக்கமும், தொடர் பயிற்சியும் என்னை சாதிக்க வைத்துள்ளது.’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in