Published : 01 Aug 2023 09:34 AM
Last Updated : 01 Aug 2023 09:34 AM

வேலூரில் 100-வது ஆண்டில் ‘கண்ணன் கோலி சோடா’

வேலூர்: பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் போட்டிகளை சமாளித்து வேலூரைச் சேர்ந்த ‘கண்ணன் கோலி சோடா’ நிறுவனம் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1924-ல் கண்ணுசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட ‘கண்ணன் அண்ட் கோ’ கோலி சோடா நிறுவனம், 3-வது தலைமுறையாக ஆனந்த கிருஷ்ணன், ஹரி கிருஷ்ணன் சகோதரர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவரிக்கும் ஆனந்த கிருஷ்ணன், ‘‘வேலூரில் வசதியான குடும்பத்தில் பிறந்த கண்ணுசாமி முதலியார், 25 வயதில் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற
ஆர்வத்தில் மதுரை பக்கம் பார்த்த கோலி சோடா கம்பெனியை வேலூரில் தொடங்க ஆர்வமாக இருந்தார். அந்த காலத்தில் வேலூரில் எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை.
இந்தியாவில் கோலி சோடா கம்பெனி தொடங்க ஜெர்மனி நாட்டில் உள்ள ஒரு கம்பெனிதான் உதவி வந்துள்ளது. அந்த கம்பெனியின் முகவரியை வாங்கி தபால் கார்டு
மூலம் தொடர்பு கொண்டு தொழில் தொடங்கினார் கண்ணுசாமி. கோலி சோடா தயாரிக்க இயந்திரங்களையும், பயிற்சி, பாட்டில்களையும் வழங்கியுள்ளனர்.

வேலூரின் முதல் தொழிற்சாலையாக ‘கண்ணன் அண்ட் கோ’ என்ற பெயரில் 1924-ல் கார்த்திகை மாதத்தில் பச்சை, பன்னீர், இஞ்சி வாசனை களில் கோலி சோடா அறிமுகமா
னது. ஆரம்பத்திலேயே மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததால் ஏறக்குறைய 25 ஆண்டுகள் வரை எங்கள் தாத்தாதான் ஏகபோக வியாபாரம் செய்துள்ளார்’ என்றார்.

கோலி சோடாவுக்கு 1995-ல் ‘கோக-கோலா’ சவாலாக மாறியது. 2010 வாக்கில் இந்தியாவுக்கே கோலி சோடா பாட்டிலை சப்ளை செய்து வந்த உத்திரபிரதேச மாநில
தொழிற்சலை மூடப்பட்டது. ஆனால், கண்ணன் அண்ட் கோ நிறுவனத்தினர், பாட்டில் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி கடைசியாக 15 நாட்கள் தொழிற்சாலையை இயக்க வைத்து 5 ஆண்டுகளுக்கு தேவையான சோடா பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்தனர். அதேநேரம், தமிழ்நாட்டில் இருந்த பல கோலி சோடா கம்பெனிகள் தொழிலை விட்டு வெளியேறின.

ஆனந்த கிருஷ்ணனின் தந்தை மோகன கிருஷ்ணன் கூறும்போது, ‘‘நாங்கள் கடைசியாக வாங்கி வைத்த பாட்டில்களை 2014-க்கு பிறகு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வெளிநபர்களிடம் இருந்த பழைய பாட்டில்களை வாங்க ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்த சில கோலி சோடா கம்பெனிகள் சேர்ந்து மீண்டும் பாட்டில் தயாரிப்பு கம்பெனியிடம் பேசி அந்த ஆலையை இயக்க ஏற்பாடு செய்தோம்’’ என்றார்.

‘‘தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு போராட்டத்துக்குப் பிறகுதான் ‘கோலி சோடா’ மீது இளைஞர்களுக்கு மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது. பன்னாட்டு குளிர்பானங்களை தவிர்த்து கோலி சோடாவை வாங்கி குடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களுக்கு ஏற்பட்டதால்தான் இந்த தொழில் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. கோலி சோடா தயாரிப்பு இயந்திரங்களும் நவீனமயமாகிவிட்டன’’ என்றார்.

கண்ணன் கோலி சோடா இன்று பன்னீர், பச்சை, ப்ளூ பெர்ரி, ஆரஞ்ச், கிரேப், லெமன் வாசனைகளில் விற்பனையாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x