Last Updated : 17 Jun, 2023 07:00 PM

 

Published : 17 Jun 2023 07:00 PM
Last Updated : 17 Jun 2023 07:00 PM

காளையார்கோவில் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய தர்மச் சக்கரம் கண்டெடுப்பு

ஆல்பட்ட விடுதி கிராமத்தில் கண்டறியப்பட்ட 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய தர்மச்சக்கரத்துடன் பேராசிரியர் தி.பாலசுப்பிரமணியன்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஆல்பட்ட விடுதி கிராமத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய தர்மச் சக்கரத்தை காரைக்குடியைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியர் தி.பாலசுப்பிரமணியன் கண்டறிந்தார்.

இதுகுறித்து அவர் கூறியது: “கலசங்குடி சித்திரைவேலு, இலந்தக்கரை ரமேஷ் ஆகியோர் கொடுத்த தகவல்படி, இங்கு ஆய்வு செய்தபோது தர்மச் சக்கரம் கிடைத்தது. அது 8 ஆரங்களுடன் ஒரு தாங்கியில் உள்ளது போன்று காணப்படுகிறது. சக்கரத்தின் மேற்புறம் ஒரு நெருப்பு சுடர் போன்று உள்ளது.

ஆரங்கள் ஞானம் அடைதல், சரியான பார்வை, நல்ல எண்ணம், பேச்சு ,செயல், வாழ்வாதாரம், முயற்சி, நினைவாற்றல் ஆகிய 8 வகையான புத்தரின் பாதையை குறிக்கும். அதிலுள்ள வட்ட வடிவம் தர்ம போதனைகளையும், மையப் பகுதி தார்மிக ஒழுக்கம், ஞானத்தையும், சக்கரத்தின் சுழற்சி மனிதனின் பிறப்பு, இறப்பையும் குறிக்கும்.

ஆல்பட்டவிடுதி கிராமத்தில் கண்டறியப்பட்ட 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய தர்மச்சக்கரம்.

பழங்காலம் தொட்டே, தமிழக மன்னர்களிடம் நிலங்களை தானம் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. தர்மச் சக்கரம் புத்த மத வழிபாட்டுக்கு நிலம் தானம் கொடுக்கப்பட்டதை குறிக்கும். இதன்மூலம் இப்பகுதியில் 10-ம் நூற்றாண்டில் புத்த துறவிகள் வந்து தங்கியுள்ளனர்.

அவர்களை மன்னர்கள் ஆதரித்ததோடு, வழிபாட்டுக்காக நிலங்களையும் தானமாக வழங்கியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஏற்கெனவே இக்கிராமம் அருகேயுள்ள மல்லலில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x