Published : 17 Jun 2023 06:47 AM
Last Updated : 17 Jun 2023 06:47 AM

எத்தனை ஸ்மார்ட் வகுப்புகள் வந்தாலும் சாக்பீசுக்கு என்றுமே மவுசுதான்!

கோப்புப் படம்

திண்டுக்கல்: அரசு, தனியார் பள்ளிகளின் வகுப்பறைகள் கணினிமயமாக்கப்பட்டு `ஸ்மார்ட் போர்டு'களை கொண்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இன்னமும் பெரும்பாலான பள்ளிகளில் கரும்பலகையில் சாக்பீஸ் கொண்டு எழுதி பாடம் நடத்துவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால், சாக்பீஸ் தயாரிக்கும் தொழில் சில குடும்பங்களை இன்றும் காப்பாற்றி வருகிறது.

2 மாத கோடை விடுமுறை, அதற்கு முன்பு முழு ஆண்டு தேர்வுக் காலம் என்பதால் சாக்பீஸ் பயன்பாடு அதிகம் இல்லாமல் இருந்தது. இதனால்,

கடந்த 3 மாதங்களாக சாக்பீஸ் தயாரிப்பாளர்கள் விற்பனை இன்றி தவித்தனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தேவைகள் அதிகரிக்கத் தொடங்கியதால் சாக்பீஸ் உற்பத்தியை அதிகப்படுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைத் தொழிலாளாக சாக்பீஸ் உற்பத்தி செய்து வந்தன. கரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால் சாக்பீஸ் தயாரிப்புத் தொழில் நின்றுபோனது. இதையடுத்து 5-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாக்பீஸ் தயாரிப்பு தொழிலைக் கைவிட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டன.

தற்போது 5 குடும்பத்தினர் மட்டுமே சாக்பீஸ் தயாரிக்கும் தொழில் ஈடுபட்டு வருகின்றனர். சிலருக்கு வேலைதரும் குடிசைத்தொழிலாக இருந்த சாக்பீஸ் தயாரிப்புத் தொழில், கரோனாவுக்குப் பிறகு குடும்பத் தொழிலாக மாறி, அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் அனுமந்த நகர் பகுதியில் சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் அசோக் கூறியதாவது:

சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறேன். கரோனா காலத்தில் பள்ளிகள் திறக்காததால் இந்த தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் தெரிந்த தொழிலை விடக்கூடாது என்ற மன உறுதியோடு நின்றேன். தற்போது மீண்டும் சாக்பீஸ் விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

வெளியாட்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கவேண்டும் என்பதால் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டே பணிகள் மேற்கொள்கிறோம். இங்கு வெண்மை மற்றும் பல வண்ண நிறங்களில் சாக்பீஸ்கள் தயாரிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கிறோம்.

கோடை விடுமுறையால் தொய்வாக இருந்த சாக்பீஸ் உற்பத்தி தற்போது பள்ளிகள் திறப்பால் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அரசு, தனியார் பள்ளிகள் என பல பள்ளிகளில் இருந்து நேரடியாகவும் வந்து சாக்பீஸ்களை வாங்கிச் செல்கின்றனர். என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x