

விருதுநகர்: விருதுநகரில் பழைய அருப்புக்கோட்டை சாலையில் செந்தி விநாயகபுரம் தெரு உள்ளது. சாலையின் அருகே தமிழ் எண் பொறிக்கப்பட்ட ஆங்கிலேயர் கால மைல் கல் ஒன்று உள்ளது. இதனை, முத்து முனியசாமியாக கருதி அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதையறிந்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் சென்று அந்த கல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து வே.ராஜகுரு கூறியதாவது: ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலங்களில் மைல் கற்களில் ஊர்ப்பெயர்களை ஆங்கிலம், தமிழிலும், தூரத்தை ரோமன், தமிழ், அரபு எண்களிலும் பொறித்து வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய மைல் கற்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளார்.
விருதுநகரில் தற்போது கண்டறியப்பட்டுள்ள மைல்கல்லில் "விருதுபட்டி" என ஆங்கிலத்திலும், தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து விருதுநகர் ரயில் நிலையம் வரை உள்ள தூரத்தை 1 மைல் என அரபு எண்ணிலும், ‘௧’ என்ற தமிழ் எண்ணிலும் மைல் கல்லில் குறித்துள்ளனர். ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து 1915-ல் நகராட்சியான விருதுநகர், 1923-க்கு முன்பு விருதுபட்டி என அழைக்கப்பட்டது.
மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை ரயில் பாதை அமைத்தபோது, 1876-ல் விருதுபட்டியில் ரயில் நிலையம் வந்தது. பெருங்கற்காலம் முதல் காசி, கன்னியாகுமரி பெருவழிப் பாதையில், வெற்றிச் சின்னமாக, வணிகம் சார்ந்த ஒரு ஊராக இருந்ததால் இவ்வூர் விருதுபட்டி என பெயர் பெற்றதாகக் கருதலாம். இந்த மைல் கல்லின் எழுத்தமைதி கொண்டு கி.பி.1875-க்கு முன்பு நடப்பட்டதாகக் கருதலாம். இவ்வாறு அவர் கூறினார்.