Published : 09 Jun 2023 08:25 AM
Last Updated : 09 Jun 2023 08:25 AM

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கிய மகனை தொலைக்காட்சி நேரலை மூலம் கண்டுபிடித்த பெற்றோர்

கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் மகனுடன் தாய் மீரா தேவி.

புவனேஸ்வர்: கோரமண்டல் ரயில் விபத்தின்போது காணாமல் போன மகனை, தொலைக்காட்சி நேரலையால் பெற்றோர் கண்டுபிடித்தனர்.

கடந்த 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின. இதில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த நேபாளத்தை சேர்ந்த ராமானந்தா பஸ்வான் (15) குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அவரது தாய் மீரா தேவி, தந்தை ஹரி பஸ்வான் நேபாளத்தில் இருந்து ஒடிசாவுக்கு வந்து ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி அலைந்தனர். தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், மகனை தேடி அலையும் பெற்றோரின் பேட்டியை நேரலையாக ஒளிபரப்பு செய்தார்.

இதனிடையே ரயில் விபத்தில் படுகாயமடைந்த ராமானந்தா பஸ்வான், ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டியில் தனது தாய், தந்தையின் பேட்டி ஒளிபரப்பானதை பார்த்த ராமானந்தா மருத்துவர்களிடம் தனது பெற்றோரை அடையாளம் காட்டினார்.

இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம், தனியார் தொலைக்காட்சி நிருபரை தொடர்பு கொண்டது. அந்த நிருபரின் உதவியால் மகனுடன் பெற்றோர் இணைந்தனர்.

தாய் மீரா தேவி கூறும்போது, “கோரமண்டல் ரயில் விபத்து குறித்து அறிந்ததும் பதற்றத்தில் ஓடிசாவுக்கு விரைந்தோம். ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி அலைந்தோம். உதவி மையங்களில் விவரங்களை கேட்டறிந்தோம். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இறுதியில். தொலைக்காட்சி செய்தியால் எனது மகனை கண்டுபிடித்து விட்டேன்" என்று கண்ணீர்மல்க கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x