

இம்பால்/புதுடெல்லி: மணிப்பூர் முதல்வராக பாஜகவின் யும்நம் கேம்சந்த் சிங் இன்று மாலை பதவியேற்றார். அவருடன் இருவர் துணை முதல்வர்களாகவும், ஒருவர் அமைச்சராகவும் பதவியேற்றனர்.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள யும்நம் கேம்சந்த் சிங் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர். துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள நெம்சா கிப்ஜென் குகி சமூகத்தைச் சேர்ந்தவர். மற்றொரு துணை முதல்வரான லோசி திக்கோ, நாகா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவர்களோடு, கோவிந்ததாஸ் கொந்தவ்ஜம் என்பவர் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய 61 வயதான முதல்வர் யும்நம் கேம்சந்த் சிங், ‘‘மணிப்பூரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு பெரிய பொறுப்பை பாஜக தேசிய தலைமை எனக்கு வழங்கியுள்ளது. நாங்கள் அனைத்து சமூகத்தினரின் விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளோம். இனியும் நிறைவேற்றுவோம்’’ என தெரிவித்தார்.
முன்னதாக, புதிய அரசு பொறுப்பேற்ற உள்ளதை முன்னிட்டு மணிப்பூரில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது.
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்டது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். பல மாதங்களாக வன்முறை நீடித்ததால் கடந்த 2025 பிப்ரவரியில் பாஜகவை சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலகினார்.
இதையடுத்து மணிப்பூர் சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டு, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பிறகு இது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிப்ரவரி 12-ம் தேதி முடிவுக்கு வர இருந்த நிலையில், தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.