

லக்னோ: சட்டவிரோத குடியேறிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஊடுருவல்காரர்களை தங்க வைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்காலிக தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சட்டம் - ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவை நமது முதன்மையான முன்னுரிமை. மாநிலத்தில் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையையும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் பகுதியில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காண்பதை உறுதிசெய்து, விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ஊடுருவல்காரர்களை தங்க வைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்காலிக தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும்’ என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சட்டவிரோத குடியேறிகள் இந்த மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள். தேவையான சரிபார்ப்பு செயல்முறை முடியும் வரை அங்கேயே தங்கியிருப்பார்கள்.
தடுப்புக் காவல் மையங்களில் வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகள் சட்ட நடைமுறைகளின்படி அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது உத்தரப் பிரதேசம். இதனால் ஊடுருவல்காரர்களை கண்காணிக்க உ.பி முதல்வர் இந்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.