எரிவாயு பற்றாக்குறையால் வேலையிழப்பு: சூரத்திலிருந்து உ.பி, பிஹார் திரும்பும் தொழிலாளர்கள்

எரிவாயு பற்றாக்குறையால் வேலையிழப்பு: சூரத்திலிருந்து  உ.பி, பிஹார் திரும்பும் தொழிலாளர்கள்
Updated on
1 min read

புது டெல்லி: எரிவாயு பற்றக்குறையால் சூரத்தில் வேலை இழந்த உத்தரப் பிரதேசம், பிஹார் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். வீடு திரும்புபவர்கள் ரயில் நிலையத்தில் 14 மணி நேரம் வரிசையில் நிற்கும் காட்சிகள் இப்போது வைரலாகின்றன.

சத் மற்றும் ஹோலி பண்டிகை காலத்தைப் போல, உ.பி, பிஹார்வாசிகள் சூரத் ரயில் நிலையத்தில் ரயில்களுக்காகத் காத்திருக்கின்றனர். இதற்காக அனைவரும் கொளுத்தும் வெயிலில் நேற்று 14 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்தனர்.

சூரத்தின் உத்னா ரயில் நிலையத்தில் திரண்டிருந்த பிரம்மாண்டமான கூட்டத்தைக் காட்டும் பல காட்சிப்பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. மிகுந்த துயரங்களுடன் காத்திருந்தவர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறினர்.

ஊர் திரும்பும் தொழிலாளர்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு எப்படியாவது ரயில் நிலையத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தனர். இந்தச் சூழலுக்கு மத்தியில், கூட்டத்திலிருந்த ஒரு தொழிலாளி, “நண்பா, நான் இனிமேல் இங்கு வரவே மாட்டேன்,” என்று வேதனையுடன் கூறுவதும் வைரலாகிறது.

40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், கைகளில் பைகளுடன் மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்து நிற்கின்றனர். போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காதவர்களுக்கு கழிப்பறை வசதிகள்கூட அங்கு முறையாகச் செய்யப்படவில்லை. இதனால், பலரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அச்சமூட்டுவதாக மாறிய இச்சூழலில், பல மணிநேரம் வரிசையில் நின்றிருந்த பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் மன உளைச்சலில் காணப்பட்டனர்.

தள்ளுமுள்ளுக்கு மத்தியில் பல குழந்தைகளின் அழுகுரலும் அடங்கவில்லை. ஆரம்பத்தில், 8000-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும், இது திடீரெனக் கூட்ட நெரிசலை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், 6 சிறப்பு ரயில்கள் நாள் முழுவதும் சுமார் 21,000 பயணிகளை ஏற்றிச் சென்றதாக மேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், உத்னாவிலிருந்து ஜெயநகருக்கு இரவில் ஒரு கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பாந்த்ரா-கோரக்பூர் மற்றும் வல்சாத்-மவ் போன்ற ரயில்களுக்கு உத்னாவில் கூடுதல் நிறுத்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டத்தைக் கருத்தில் கொண்டு இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எரிவாயு பற்றாக்குறையால் வேலையிழப்பு: சூரத்திலிருந்து  உ.பி, பிஹார் திரும்பும் தொழிலாளர்கள்
வெளிச்சத்துக்கு வந்த ஸ்டாலின்- ராகுல் சண்டை: பியூஷ் கோயல் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in