

ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த அஸ்ட்ரோ வால்டாய்ஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி ராதா கிருஷ்ண காவலூரு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
எனது முந்தைய நிறுவனத்தின் ஊழியர்கள் சராசரியாக 15 கி.மீ. தொலைவு பயணம் செய்து அலுவலகத்துக்கு வந்தனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தினர். ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டர் பெட்ரோலில் 45 கி.மீ. வரை செல்லும். இதன்படி 3 ஊழியர்களின் ஒரு வழி பயணத்துக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தேவைப்படும்.
ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 12,000 பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் அலுவலகத்துக்கு செல்ல தினமும் 8,000 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. ஹைதராபாத் முழுவதும் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 9 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் மோட்டார் வாகனங்களில் அலுவலகங்களுக்கு செல்ல தினசரி 6 லட்சம் லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்தால் ஒரே நாளில் ஹைதராபாத் நகரில் 6 லட்சம் லிட்டர் பெட்ரோலை சேமிக்க முடியும்.
நாடு முழுவதும் மோட்டார் வாகனங்களுக்கு தினசரி 58.1 கோடி லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தால் பெருமளவு பெட்ரோலை சேமிக்க முடியும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஓராண்டில் ரூ.15,000 கோடிக்கும் அதிகமாக சேமிக்க முடியும். இதன்மூலம் ஓராண்டில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும். பெட்ரோலும் மிச்சமாகும், நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலும் கணிசமாகக் குறையும். இவ்வாறு ராதா கிருஷ்ண காவலூரு தெரிவித்துள்ளார்.