

கோப்புப்படம்
புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஏப்.16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறவே மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மற்றும் தொகுதி மறு வரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக விவாதிப்பதற்காக ஏப்.15-ம் தேதி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தவுள்ளன. டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.