

மதுரை நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு குற்றவாளிகள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் நேற்று தண்டனை விவரம் அறிவிப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், ஏப்.2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கரோனா ஊரடங்கின்போது குறித்த நேரத்தைத் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி, இவர்கள் இருவரையும் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு சாத்தான்குளம் போலீஸார், காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர்.
இதில் ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸும், 23-ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்படி, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதை கொலை வழக்காக சிபிஐ பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்புசார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை சிறையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். ‘‘தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் போலீஸார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன. இதுபோன்ற கொடூர தாக்குதல்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீஸார் தாக்கியுள்ளனர். தவிர, இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.
போலீஸார் தாக்கியதால்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. சாட்சியங்களின் அடிப்படையில் 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும்’’ என தெரிவித்தார்.
இதையடுத்து, குற்றவாளிகள் 9 பேருக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் உடல், மனநல பரிசோதனை நடத்தப்பட்டு, அதற்கான அறிக்கையை மருத்துவர்கள் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
நீதிபதி முத்துக்குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தண்டனை விவரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யாததால், ஏப்.2-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். இதற்கிடையே, குற்றவாளிகள் 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என, உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.