

ராய்ப்பூர்: மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சத்தீஸ்கருக்கு ஒரு நாள் பயணமாக நேற்று சென்றார். இப்பயணத்தில் துர்க் மாவட்டத்தின் 2 கிராமங்களில் விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: விவசாயிகளுக்கு வலுவான சட்டப் பாது காப்பை வழங்குவதற்காக, மத்திய அரசு விரைவில் புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தும். போலி விதைகள், தரமற்ற உரங்கள் மற்றும் போலி பூச்சிக்கொல்லிகள் மூலம் விவசாயிகள் சுரண்டப்படுவதை இனி மேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. விவசாயிகளின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், விவசாயிகளின் நலன் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. இயற்கை விவசாயம், நுண்ணீர் பாசனம், நீர் சேமிப்பை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் ஆகியவைதான் விவசாயத்தின் எதிர்காலம். இந்த முயற்சிகளில் விவசாயிகள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.