

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாக உடைந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓர் அணியாகவும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியாகவும் பிரிந்தது. தற்போது சிவசேனாவில் (உத்தவ் அணி) நடைபெறும் சம்பவங்கள் கட்சிக்குள் மற்றொரு பிளவை ஏற்படுத்துமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் வீட்டில் சமீபத்தில் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மராத்வாடா மக்களவை தொகுதி எம்.பி. சஞ்சய் ஜாதவ் பங்கேற்கவில்லை. சேனா பவனில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
சிவசேனா உத்தவ் அணியில் உள்ள எம்.பி.க்கள் சிலர் கடந்த சில மாதங்களாகவே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் கட்சித் தலைமையின் ஈடுபாடு குறைவாக இருந்ததே, தோல்விகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. அரவிந்த் சாவந்த் மற்றும் அனில் தேசாய் போன்ற தலைவர்களைத் தவிர, மற்ற எம்.பி-க்கள் கட்சி மாறலாம் என கூறப்படுகிறது.
ஹிங்கோலி எம்.பி. நாகேஷ் பாட்டில் அஷ்டிகர் மற்றும் யவத்மால்- வாஷிம் எம்.பி. சஞ்சய் தேஷ்முக் ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் சமீபத்தில் அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டனர். அதன்பின் சஞ்சய் ஜாதவ் எம்.பி. டெல்லியில் அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேசியுள்ளார். இது கட்சி தாவல் குறித்த ஊகங்களை வலுப்படுத்தி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்கள் சமீபத்தில் பாஜக.வில் இணைந்த நிலையில், சிவசேனா உத்தவ் அணியிலும் சில எம்.பி.க்கள் அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.