

புதுடெல்லி: வெளிநாடுகளில் அதிகச் சம்பளத்துடன் கூடிய வேலை தருவதாக கூறி, இந்திய இளைஞர்களை தென் கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் மோசடி முகாம்களுக்கு கடத்திய வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகளை சிபிஐ கைது செய்துள்ளது. இவர்கள் நிபேந்தர் சவுத்ரி, நீலேஷ் நர்பத்சின் புரோகித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: இந்திய இளைஞர்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்திய ஏஜெண்டுகள் மற்றும் உதவியாளர்களின் நெட்வொர்க்கை இந்த விசாரணை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்திய இளைஞர்கள் மியான்மர் மற்றும் கம்போடியாவில் உள்ள மோசடி முகாம்களுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்களில் பலர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நிபேந்தர் சவுத்ரி, ஒரு மோசடி முகாம் நடத்துபவர் சார்பில் செயல்பட்டு வந்துள்ளார். இவர் தாய்லாந்து வழியாக இந்தியர்களை மியான்மருக்குக் கடத்திச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இளைஞர்கள் விமானம் மூலம் பாங்காக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மே சோட் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சட்ட விரோதமாக தாய்லாந்து- மியான்மர் எல்லையைக் கடந்து மியான்மரில் இயங்கும் மோசடி முகாம்களுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இரண்டாவது குற்றவாளியான நீலேஷ் புரோகித், மோசடி முகாம் நடத்துவோர் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள துணை ஏஜெண்டுகளின் வலைப் பின்னலை நிர்வகித்து வந்துள்ளார்.
இவர் தாய்லாந்து- மியான்மர் எல்லைக்கு அருகில் ஒரு மோசடி முகாமின் அலுவலகத்தில் இருந்து செயல்பட்டுள்ளார். இருவரும் கிரிப்டோ கரன்சி மூலம் கட்டணம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.