

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க தலைவராக இருந்த சந்திரிமா பட்டாச்சார்யா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து எதிரணியுடன் சேர்ந்தார். இது மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வராக மம்தா இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர் சந்திரிமா பட்டாச்சார்யா. மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிலை குலையத் தொடங்கியது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க தலைவராக இருந்த சுப்ரதா பக்ஷிக்கு பதில் சந்திரிமா பாட்டாச்சார்யாவைக் கட்சியின் மாநில தலைவராக கடந்த மாதம் மம்தா நியமித்தார்.
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் போர்க்கொடி தூக்கிய பெரும்பான்மை எம்எல்ஏக்கள், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் தனி அணியாக உருவாகி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றனர்.
திரிணமூல் எம்.பி.க்கள் 20 பேர் கட்சியில் இருந்து பிரிந்து ஏசிபிஐ என்ற சிறு கட்சியுடன் இணைந்து பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சந்திரிமா பட்டாச்சார்யா நேற்று ராஜினாமா செய்தார். அதன்பின் அவர் மேற்குவங்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ரிதப்ரதா பானர்ஜியைச் சந்தித்தார். இது மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. முக்கிய துறைகளில் அமைச்சராக இருந்த போது, சந்திரிமா பட்டாச்சார்யா ஏன் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று மம்தாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கட்சி அலுவலகத்துக்கு போட்டி
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான திரிணமூல் பவன் கொல்கத்தாவில் உள்ளது. பெரும்பான்மை எம்எல்ஏ.க்கள் பிரிந்து தனி அணியாக உருவானதால் அவர்கள் தாங்கள்தான் உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என கூறி திரிணமூல் பவன் அலுவலகத்தை கைப்பற்றி பூட்டுகளை மாற்றினர். இதுகுறித்து மம்தா ஆதரவாளர்கள் போலீஸில் புகார் அளித்ததால் திரிணமூல் பவனில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொன்றால் தடுக்கலாம்
தனக்கு எதிராக போர்க் கொடி தூக்கியவர்களை துரோகிகள் என கூறியுள்ள மம்தா, ‘‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னம் எனது விசுவாசிகள் இருக்கும் அணியிடம்தான் இருக்கும். என்னை தடுக்க வேண்டும் என்றால் நீங்கள் என்னை கொல்ல வேண்டும்” என சவால் விடுத்துள்ளார். இதனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோர எதிரணி நீண்ட சட்ட போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும்.