

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்துவதாகவும், தங்கள் கட்சி அலுவலகங்களை சூறையாடுவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மூதாட்டி ஒருவர் முகத்தில் காயமடைந்த நிலையில் ரத்தக் கரையோடு சாலையில் படுத்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அந்த வீடியோவோடு வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அலிபுர்துவாரில் ஒரு வயதான மூதாட்டியை பாஜகவின் கொடூரமாக தாக்கி உள்ளனர். பட்டப்பகலில் கலவரம் செய்யவும், அப்பாவி மக்களை படுகொலை செய்யவும் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார்களா?
தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டம் அமைதியாகவும் வன்முறையின்றியும் இருப்பதை உறுதி செய்வதற்காக என்று கூறி தேர்தலுக்குப் பிறகும் பணியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்ட மத்தியப் படைகள் இப்போது எங்கே இருக்கின்றன?
பாஜகவினரின் வன்முறையை எளிதாக்குவதற்காக மட்டுமே அவர்கள் இருக்கிறார்களா? பாஜகவின் வன்முறை முகம் அம்பலமாகி உள்ளது. மேற்கு வங்கம் இந்த காட்டுமிராண்டித்தனத்தை பொறுத்துக்கொள்ளாது. சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பதில் சொல்லியாக வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், ஓர் அலுவலகம் தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த பதிவில், “பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற மறுகணமே தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்திவிட்டது.
ஜல்பைகுரி வார்டு 14-ல் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில், பாஜக ஆதரவு பெற்ற சமூக விரோத சக்திகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அமைதியின்மையை உருவாக்க திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்ட செயல் இது. இதுதான் பாஜகவின் உண்மையான முகம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவின் டோலிகஞ்ச், கஸ்பா பகுதிகளிலும், ஹவுராவின் பரநகர், கமர்ஹாட்டி பகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடையே, தேர்தல் வெற்றியை அடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மீதும், சொத்துக்கள் மீதும் பாஜகவினர் தாக்குதல் நடத்துவதாக தனக்கு தகவல்கள் வருவதாகவும் எனவே கட்சியினர் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். தாக்குதல்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக காவல்துறையிடமிருந்து அறிக்கை கோரப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரி ஒஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இத்தகைய தாக்குதல்களுக்கும் தங்கள் தொண்டர்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.
“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீதுள்ள விரக்தியை வெளிப்படுத்தும் நோக்கில் அக்கட்சிக்குள்ளேயே இருக்கும் போட்டி கோஷ்டிகள் இச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்” என்று பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா தெரிவித்துள்ளார்.