

அமித் ஷா
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதியான பபானிப்பூரில் பாஜகவின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “இந்த முறை யாரும் பயப்படத் தேவையில்லை. எந்தவொரு ரவுடியாலும் மேற்கு வங்க வாக்காளர்களைத் தடுக்க முடியாது.
திரிணமூல் காங்கிரஸை வேரோடு பிடுங்கி வங்காள விரிகுடாவில் தூக்கி எறிய, அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.
சுவேந்து அதிகாரி இந்தத் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு மேற்கு வங்க மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நாங்கள் பொற்கால வங்கத்தை உருவாக்க விரும்புகிறோம்; இதனால்தான் நாம் திரிணமூல் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் ஒரு மாற்றம் நிச்சயம் நிகழும். ஆனால் பபானிப்பூரில் ஒரு மாற்றம் வேண்டுமா, வேண்டாமா? எங்கள் வேட்பாளர் சுவேந்து அதிகாரிக்காக உங்கள் வாக்குகளைக் கோரி நான் இங்கு வந்துள்ளேன்.
2014-ஆம் ஆண்டு முதல், மோடிஜியின் மீது நம்பிக்கை வைத்தவர்கள் மாற்றத்தைக் கண்டுள்ளனர். பாஜக ஆட்சி அமைப்பதற்கு உதவுங்கள்; வங்கத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே நேரில் காணுங்கள்.
கடந்த முறை மம்தா நந்திகிராமில் தோல்வியடைந்தார்; இந்த முறை மேற்கு வங்கம் முழுவதும் அவர் தோற்கடிக்கப்படப் போகிறார்" என்று அவர் கூறினார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக, தான் 15 நாட்கள் மேற்கு வங்கத்திலேயே தங்கியிருப்பதாகவும் அமித் ஷா அறிவித்தார்.