

புதுடெல்லி: பல்கலைக்கழக மானியக் குழுவின் சமத்துவ விதிகளுக்கு எதிராகவும், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில், ஆயிரக்கணக்கானப் போராட்டக்காரர்கள் திரண்டு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
'ரிசர்வேஷன் ரீஃபார்ம் அந்தோலன்' என்ற அமைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீட் தேர்வுக்காகத் தயாராகும் மாணவர் ஹர்ஷ் துபே தலைமை தாங்கினார். அவருடன் கர்ணி சேனா, சாணக்யா சேனா மற்றும் ஜெனரல் சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், சமூக ஊடகப் பிரபலங்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்குப் பதிலாக பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய யுஜிசி விதிகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்தனர். போராட்டக்களத்தில் அனுமன் சாலீசா பாடப்பட்டதுடன், பக்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.
டெல்லி காவல் துறை, விரைவு அதிரடிப் படை மற்றும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவை ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தன. போராட்டம் நடத்துவதற்கான அனுமதி மற்றும் இடம் குறித்து தொடக்கத்தில் காவல்துறைக்கும் அமைப்பாளர்களுக்கும் இடையே குழப்பம் நீடித்தது.
போராட்டக்காரர்களை ராம்லீலா மைதானத்துக்கு செல்லுமாறு காவல்துறை கேட்டுக் கொண்ட போதிலும், அவர்கள் ஜந்தர் மந்தரிலேயே அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். பிரதமர் மோடியிடம் தங்களது கோரிக்கை மனுவைச் சமர்ப்பிக்கும் வரை இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்று ஹர்ஷ் துபே தெரிவித்தார்.