

புவனேஸ்வர்: பள்ளிக் குழந்தைகளை காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி உயிர்நீத்த தெரு நாய்க்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.
தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக ஊடகங்களில் அடிக்கடி செய்தி வருகின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டால், விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை நாடு முழுவதும் உள்ளது.
இந்நிலையில் தெருநாய் ஒன்று விஷ பாம்புடன் போராடி பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றிய சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மயூர்பன்ச் மாவட்டத்தில், திராகுலா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள நர்சரி பள்ளியில் 30 குழந்தைகள் படிக்கின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகம் அருகே விஷ பாம்பு ஒன்று வந்தது. இதை பார்த்ததும் அந்த தெருவில் உள்ள காளி என்ற நாய் குரைத்து அதனுடன் சண்டையிட்டது. இதனால் அந்த பாம்பு சீற்றத்துடன் நாயை பலமுறை கொத்தியது. முகத்திலும், வாயிலும் பாம்பு கொத்தியதையும் பொருட்படுத்தாமல் காளி முழு மூச்சூடன் சண்டையிட்டு பாம்பை கடித்து கொன்றது.
ஆனால் பாம்பின் விஷம் உடலில் ஏறியதால், சிறிது நேரத்தில் காளி மயங்கி விழுந்து இறந்தது. இச்சம்பவம் திராகுலா கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. வீரத்துடன் போராடி தங்களின் குழந்தைகளை காப்பாற்றிய காளிக்கு கிராம மக்கள் வெள்ளைத் துணி போர்த்தி, மலர் மாலைகளால் அலங்கரித்து அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.