

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அமைப்பைச் சேர்ந்த மனிஷ் பிரம்பட், “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி - டெமாக்ரட்டிக்” (சிஜேபி-டி) என்ற பெயரில் நேற்று புதிய பிரிவைத் தொடங்கினார்.
இதுகுறித்து பிரம்பட் கூறியுள்ளதாவது: சிஜேபி இளைஞர் இயக்கமாகத் தொடங்கப்பட்டது. ஆனால், நிறுவனரான அபிஜித் திப்கே அக்கட்சியை கேஜ்ரிவாலின் விருப்பப்படி செயல்படும் கைப்பாவையாக மாற்றிவிட்டார். களத்தில் உழைத்த தொண்டர்களைப் புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாகச் செயல்படுகிறார்.
குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திப்கே புறக்கணித்துவிட்டு, இளைஞர் இயக்கத்தை ஆம் ஆத்மி கட்சியின் பின்னணியைக் கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிவகுத்துள்ளார். மேலும், பாஜகவை எதிர்ப்பதில் மட்டுமே சிஜேபி ஆர்வம் காட்டி வருகிறது. எனவே புதிய அமைப்பை தொடங்கியுள்ளோம். இவ்வாறு பிரம்பட் கூறியுள்ளார்.