

அதிமுக எம்.பி. தம்பிதுரை
புதுடெல்லி: மாநிலங்களவை தலைவர், துணைத் தலைவர் இல்லாத நிலையில் வழி நடத்தும் குழுவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை உட்பட 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஹரிவன்ஷின் பதவிக்காலம், கடந்த ஏப்ரல் 9-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அந்த அவையின் எம்.பி.யாக ஹரிவன்ஷை குடியரசுத் தலைவர் நியமித்த நிலையில், கடந்த 10-ம் தேதி அவர் நியமன எம்பி-யாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. அந்தப் பதவியை ஏற்கெனவே தொடர்ந்து 2 முறை ஹரிவன்ஷ் வகித்த நிலையில், அப்பதவிக்கு அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே மாநிலங்களவைத் தலைவர் துணைத் தலைவர் இல்லாத வேளைகளில், அந்த அவையை வழி நடத்தும் குழுவை குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதா கிருஷ்ணன் நேற்று முன்தினம் மாற்றியமைத்தார். அதில் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அந்தக் குழுவில், அதிமுக எம்பி தம்பிதுரை, பாஜக எம்பிக்கள் தினேஷ் சர்மா, பாங்னோன் கோன்யாக், கன்ஷியாம் திவாரி, பிஜு ஜனதா தள கட்சி எம்.பி. சஸ்மித் பத்ரா, காங்கிரஸ் எம்.பி. ஃபுலோ தேவி நேதாம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாநிலங்களவை பொதுச் செயலர் பி.சி.மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.