

சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா
புதுடெல்லி: உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமம் பகுதியில் மகர மேளா நடைபெற்று வருகிறது.
கடந்த 17-ம் தேதி உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோதிஷ்வர் மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா தனது சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கங்கை நதியில் புனித நீராட பல்லக்கில் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய உ.பி. காவல் துறை, அவிமுக்தேஷ்வர் அங்கு நீராட அனுமதி மறுத்தது.
அப்போது உ.பி. போலீஸார் மற்றும் அவிமுக்தேஷ்வர் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவிமுக்தேஷ்வர், மேளா மற்றும் உள்ளூர் நிர்வாகத்துக்கு எதிராக தர்ணாவில் அமர்ந்தார்.
இது தொடர்பாக உ.பி. அரசின் மேளா நிர்வாகம் அவருக்கு 2 நோட்டீஸ்களை அனுப்பி விளக்கம் கேட்டது. மேளா சம்பவம் குறித்து ஒரு மேடையில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘காலாநேமி (ராமாயணத்தின் ராட்சசன்)’ என அவிமுக்தேஷ்வரை விமர்சனம் செய்தார். இது துறவி சமூகத்தினர் இடையே மேலும் கோபத்தை தூண்டியது.
இந்தப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதியும் காங்கிரஸும் உ.பி. அரசை விமர்சனம் செய்தன.
இதுகுறித்து துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறும்போது, “சங்கராச்சாரியார் பாதங்களை நாங்கள் வணங்குகிறோம். அவர் தனது புனித நீராடலை முடிக்க வேண்டும். துறவிகளை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
எனினும், நேற்று முன்தினம் வசந்த பஞ்சமி புனித நீராடல் சடங்கையும் அவிமுக்தேஷ்வர் முடிக்க மறுத்து விட்டார். தன்னை அவமதித்த அரசு மன்னிப்பு கேட்பதுடன், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
ஜோதிஷ்வர் மடத்தின் சங்கராச்சாரியாரான பீடாதீஷ்வரர் சுவாமி சொரூபானந்த் சரஸ்வதி, கடந்த 2022, செப்டம்பரில் மறைந்தார். இதற்கு மறுநாள் மடத்தின் மூத்த துறவியான அவிமுக்தேஷ்வர், சங்கராச்சாரியாராக அமர்ந்தார்.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியார் பட்டத்துக்கு 2022 அக்டோபரில் தடை விதிக்கப்பட்டு வழக்கு தொடருகிறது. எனினும் சங்காராச்சாரியர்கள் விவகாரத்தில் அரசுகளும், உச்ச நீதிமன்றமும் தலையிட முடியாது என அவிமுக்தேஷ்வர் கூறி வருகிறார்.
மேலும் அவிமுக்தேஷ்வர் தொடர்ந்து மத்திய மற்றும் உ.பி. பாஜக அரசுகளுக்கு எதிராக பேசி வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் அவர் விமர்சனம் செய்கிறார். இதனால் அவிமுக்தேஷ்வருக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுவதாகப் புகார்களும் உள்ளன.